
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் இவர் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார் இதனால் இந்தி துறை உலகம் அதிர்ச்சியில் உறைந்தது.
இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர் அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன அவரது தற்கொலைக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

இதுதவிர தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் கூட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவியை கைது செய்தனர். இதேபோல பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது அவரது வீட்டிலும் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று மும்பை அந்தேரி லோகன்ட்வாலா என்னும் பகுதியில் உள்ள பிரபல நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பாரதி சிங் கிலாடி பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். பல டி.வி. நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகின்றார். சில டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகின்றார்.
மும்பையில் டி. வி. நடிகை வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் பாரதி சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.




