இந்தியா முழுவதும் 2019-ஆம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் பட்டியலை தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. நகரங்களின் வரிசையில், சென்னை முதல் இடத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தற்கொலை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதை, நாம் அன்றாடம் கேள்விபட்டுக் கொண்டே தான் வருகிறோம். தேர்வில் தோல்வி, குடும்ப பிரச்சனை, மன அழுத்தம், காதல் தோல்வி போன்றக் காரணங்களால், தற்கொலை சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், தேசிய குற்றவியல் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில், தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்றுமொரு அதிர்ச்சி தரும் செய்தியாக, இந்திய அளவில் தற்கொலை அதிகம் நடக்கும் நகரங்களில், சென்னை முதல் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், குடும்பமாக தற்கொலை செய்துக் கொள்வதில், 16 தற்கொலைகளுடன் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி, நமது இந்தியாவில்
2017 ஆம் ஆண்டில் 1,29,887 பேரும்,
2018 ஆம் ஆண்டில் 1,34,516 பேரும்,
2019 ஆம் ஆண்டில் 1,39,123 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் 50 சதவீத தற்கொலைகள், 5 மாநிலங்களில் மட்டுமே நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், இதில் 42,480 பேர் விவசாயிகள் ஆவார்கள்.
2019 ஆம் ஆண்டில்
மகாராஷ்டிராவில் 18,916 பேரும், தமிழகத்தில் 12,655 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மேற்கு வங்கம் , மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உள்ளது.
இதில் 3.7 சதவீதம் பேர் பட்டதாரிகள். 10,281 விவசாயிகள் உள்பட 42,480 கூலித்தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது சோகத்தின் உச்சம்.
மேலும் தற்கொலை செய்து கொள்பவர்களில் 15 சதவீதம் பேர் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் என தேசிய குற்றவியல் காப்பகம், தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.
நாட்டிலேயே, சென்னை நகரில் தான், அதிகபட்சமாக 2,461 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் 2018-ஆம் ஆண்டு 2,102 பேர் தற்கொலை செய்த நிலையில், 2019-ல் இந்த எண்ணிக்கை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2019-ல் டெல்லியில் 2,423 பேரும், பெங்களூருவில் 2,081 பேரும், மும்பையில் 1,229 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இந்திய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.