விரைவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தமிழகத்தின் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2006 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை கடுமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மத்திய அறிவியல் – தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பிரகாஷ் ஜவடேகருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை – 2020, ஏற்கனவே உள்ள கண்காணிப்பு விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது. மேலும், திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதைத் தடுக்கிறது. எனவே, இந்த வரைவு அறிக்கையை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய முக்கியமான நடவடிக்கையானது, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல் அனுமதிக்கப்படக் கூடாது. எனவே, இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தைத் தாங்கள் கூட்ட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.