டான்ஸ் ஆடுவதில் தகராறு.. அரிவாளால் வெட்டிக்கொண்ட மணப்பெண்-மணமகன் வீட்டார்

சென்னை தண்டையார்பேட்டையில் திருமண மண்டபத்தில் டான்ஸ் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை அப்பலோ மருத்துவமனை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தினகரன் என்பவருக்கும் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் கலந்து கொண்ட இரு வீட்டாரும், நண்பர்களும் டிஜே பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்திருந்தனர். அப்போது மணமகளின் அண்ணன் வினோத் என்பவரின் நண்பர்களுக்கும், மணமகனின் நண்பர்களுக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே வெளியில் சென்ற வினோத்தின் நண்பர்கள் ஆகாஷ், ஜான், தோத்து, வசந்த் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் திடீரென திருமண மண்டபத்தின் உள்ளே புகுந்து மணமகனின் நண்பர்களான தினேஷ், யுவராஜ், ஹேமந்த் அவர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வெட்டுப்பட்டவர்களை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்குபெறும் நிலையில் மணமக்களின் நண்பர்கள் என பங்கேற்ற இருதரப்பினரும் டான்ஸ் ஆடுவதில் மோதல் ஏற்பட்டு அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version