விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்தங்கள் காரணமாக திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் மிகப் பிரபலமான பூ சந்தைகளில் திண்டுக்கல் பூச்சந்தையும் ஒன்று. திண்டுக்கல் நகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள பூக்கள், இந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் பூ சந்தையிலிருந்து மல்லிகை, சம்பங்கி, கோழிக்கொண்டை, விரிச்சி, கனகாம்பரம் உள்ளிட்ட பலவகையான பூக்கள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ச்சியாக முகூர்த்த தினங்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து திண்டுக்கல் பூ சந்தையில் மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, செண்டு மல்லி, கோழிக்கொண்டை, விரிச்சி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன.
நேற்று ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை இன்று ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், நேற்று 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் இன்று 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் கோழிக்கொண்டை, விரிச்சி, செண்டு மல்லி, உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.
விலை உயர்வால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் பூ சந்தையில் விற்பனை அனுமதிக்கப்படவில்லை. இதனால் பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். மேலும் பல விவசாயிகள் தங்கள் நிலங்களில் பூ சாகுபடி செய்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது. பூக்களின் வரத்து குறைவு மற்றும் விழாக்கள், தொடர் முகூர்த்தங்கள் போன்ற காரணங்களால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.