துப்பாக்கிச் சூடு நடந்தது அதிமுக ஆட்சியில் தானே?: துரைமுருகன் கேள்வி

நேற்றைய தமிழ்நாடு சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகனுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

நேற்றைய (செப்டம்பர் 9) சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடியிசம் போன்றவை நடக்கவில்லை என்றார்.

அப்போது பேச்சின் இடையே குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், வெள்ளைக்காரர்கள் காலத்தில் முட்டிக்கு கீழேதான் சுடுவார்கள். ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில்தான் ரவுடிகள் கத்தியால் கேக் வெட்டியதாகவும் தூத்துக்குடியில் காவல் துறையினர் வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச்சூடு நடத்தபட்டதாகவும் குறிப்பிட்ட அவர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தது அதிமுக ஆட்சியில்தானே? அப்போது நீங்கள்தானே முதலமைச்சர்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “1969ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு குறித்து அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பேசியதை சுட்டிக்காட்டினார்.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, முதலில் கண்ணீர் புகைக் குண்டு வீசியும், தடியடி நடத்திய பின்பும்தான் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். அப்படி நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில் யாரும் உயிரிழந்தால் அதற்கு காவல் துறை பொறுப்பல்ல என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பேசியதை சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து கோடநாடு கொள்ளை மற்றும் கொலை விவகாரம் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமிக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version