முதல்வர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் விசிட்டாக நேற்று இரவு அதியமான் கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.
முதலமைச்சரின் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத போலீஸார் திகைத்து போய் நின்றனர். இந்தக் காவல் நிலையம் கலைஞர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டதாகும்.
முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாகச் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று சேலத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜவ்வரிசி மற்றும் மரவள்ளி உற்பத்தி செய்யும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். சேலம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து முதல்வர் நேற்று தர்மபுரி சென்றார்.
சேலத்திலிருந்து காரில் தர்மபுரியில் அந்த அவர் இரவு 8.15 மணிக்கு மேல் தர்மபுரி அருகிலுள்ள அதியமான் கோட்டை காவல் நிலையத்துக்கு திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலையத்தில் உள்ள தினசரி பணி பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு, நேற்று பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
புகார் மனுக்களை எப்படி விசாரிக்கிறார்கள், முதல்வரின் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீதான விசாரணை முறை என்ன என்றும் கேட்டறிந்தார்.
இதற்கு விளக்கமளித்த போலீஸார், காவல் துறையினருக்கு வார விடுமுறை வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
சுமார் 10 நிமிட ஆய்வுக்குப் பின் வெளியே வந்த அவர், அங்கு திரண்டிருந்த போலீஸாரின் குடும்ப உறுப்பினர்களையும் சிறுவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.