பூங்காவில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியால் ஆரல்வாய்மொழியில் ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆரல்வாய்மொழியில் மீன் சந்தையோடு செயல்பட்டு வந்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. அதாவது, சந்திப்பில் உள்ள பூங்காவில் கடந்த 5 மாதமாக செயல்பட்டு வந்தது. இங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், வேன்கள் சாலையோரத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இப்போது அனைத்தும் பழைய இடங்களுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென்று ஆட்டோ டிரைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆட்டோக்களை பூங்காவிற்குள் கொண்டு சென்று வரிசையாக நிறுத்தினார்கள். இதை பார்த்த காய்கறி வியாபாரிகள், ஆட்டோக்களை வெளியே கொண்டு செல்லுமாறு கூறினர். இதனால் பூங்காவில் இடம் பிடிப்பது தொடர்பாக வியாபாரிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சப்-இன்ஸ்பெக்டர் வந்தார். அங்கு வந்து அவர்களுக்கு இடையே நடந்த போட்டியை தீர்த்து வைத்தார்.
மேலும் அங்கே ஆட்டோக்கள் நிறுத்தப்படவும் அங்கேயே காய்கறி மற்றும் பழங்கள் வியாபாரிகள் இருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் வருகிற 1-ந் தேதிக்குள் காய்கறி சந்தையை பழைய இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.