நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வண்ண வண்ண உடைகளில் வர சொல்லி உத்தரவிட்ட வங்கி. காரசாரமான கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் எம். பி.
அந்த கடிதத்தில், நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வா!
இல்லாவிட்டால் தண்டம் கட்டு!
இது என்ன அரசு வங்கியா? இல்லை அதிகாரி வீட்டின் பூஜை அறையா?
உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (நவீன மயம்) ஏ.ஆர். ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை 01.10.2021 அன்று வெளியிட்டுள்ளார்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும்… யார் இவருக்கு அதிகாரம் தந்தது! ஊழியர் விதி முறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?
நவராத்திரியை நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால் எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல்.
நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும்! சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்! சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.