ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்களின் வீட்டிற்கு சென்று டீ போட்டு பிரச்சாரம் செய்த வெற்றி வேட்பாளர் நடிகை குஷ்பூ வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள குஷ்புவிற்கு நாளுக்கு நாள் மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாஜகவின் முக்கிய நட்சத்திர வேட்பாளரான குஷ்பு ஆயிரம் விளக்கு பகுதியில் தினந்தோறும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த தொகுதிக்கு குஷ்பு என்ற செய்தியைக் கேள்விப்பட்டாலே ஆரத்தி தட்டுடன் வரவேற்பு கொடுக்க அப்பகுதி மக்கள் தயாராகிவிடுகின்றனர்.
பிரபல நடிகை என்ற பந்தா துளியும் இன்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அன்புடன் அணுகி, தொகுதியில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்து வருகிறார். குறைகளை கேட்பதோடு மட்டுமல்லாது, அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான திட்டங்களையும் மக்களிடையே விளக்கி வருகிறார். திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தாமரையை மலர வைத்தே தீருவேன் என தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து குஷ்புவை வாழ்த்தி வரவேற்காத இல்லத்தரசிகளே ஆயிரம் விளக்கு தொகுதியில் இல்லை எனும் அளவிற்கு பெண்களின் ஆதரவு குஷ்புவிற்கு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிக வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களுடைய முழு ஆதரவையும் குஷ்புவிற்கு தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய குடும்பங்கள் பலவும் குஷ்புவை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து ‘எங்க வீட்டுக்கு வாங்க’ என உரிமையுடன் அழைப்பு விடுத்து உபசரித்து வருகின்றனர். அப்படி இன்று குலாம் அபாஸ் அலிகான் 7வது தெருவில் வீடு, வீடாக சென்று குஷ்பு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது முஸ்தபா, சலீன் ரீட்டா ஜோடி குஷ்புவை தங்களுடைய வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திவிட்டு செல்லும் படி அன்புடன் அழைத்தனர்.
அந்த அன்பான கோரிக்கையை மறுக்க விரும்பாத குஷ்புவும், அவர்களுடைய வீட்டிற்குள் நுழைத்தார். ஆனால் சேரில் அமர்ந்து கொண்டு ஏரியா மக்களுடன் விதவிதமாக செல்ஃபி எடுத்து நேரத்தை போக்கிவிட்டு, பேருக்கு இரண்டு மடக்கு டீயை குடித்துவிட்டு செல்ல அவர் நுழையவில்லை என்பது சிறிது நேரத்தில் தெரிந்தது. சலீன் ரீட்டாவிடம் சமையலறை எங்கு இருக்கிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொண்ட குஷ்பு மடமடவென சமையல் அறைக்குள் நுழைந்தார். ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஹாலில் காத்திருக்க சொல்லிவிட்டு, விறுவிறுப்பாக தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.
பால், டீத்தூள், சர்க்கரை ஆகியவை எங்கியிருக்கிறது என்பதை அவரே தேடி எடுத்து, சிரித்த முகத்துடனும் குஷ்பு டீ போட்ட அழகை அந்த ஏரியா மக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். சில நிமிடங்களிலேயே மணக்க மணக்க தேநீர் தயாரித்த குஷ்பு, அதனை கொண்டு வந்து அவர் கையாலேயே அனைவருக்கும் கொடுத்தார். மணம், சுவை, திடம் மட்டுமல்ல குஷ்புவின் அன்பும், அக்கறையும் கலந்திருந்ததால் தேநீர் டபுள் மடங்கு சுவையாக இருந்தாக பாராட்டினர். நான் உங்களில் ஒருத்தி என சொல்லுவதை விட வீட்டின் சமையலறை வரை சென்று நிரூபித்தே விட்ட குஷ்புவிற்கு, இப்போது ஆயிரம் விளக்கு தொகுதி பெண்களின் ஒட்டுமொத்த ஓட்டும் கன்பார்ம் ஆகியிருக்கிறது.