பாத்திரம் கழுவும் தொழிலாளிக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ளது.
கேரளத்தின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி (45) என்பவருக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
பனமரம் பகுதியைச் சேர்ந்தவரான சைதல்வி துபையில் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடய நண்பரிடம் கூகுல் பே மூலம் பணம் அனுப்பி ‘ஓணம் பம்பர்’ லாட்டரி ஒன்றை வாங்கச் சொல்லியிருக்கிறார்.பின் நண்பரும் கடையில் இருந்த கடைசி சில டிக்கெட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சைதல்வியின் வாட்ஸ் ஆப்பிற்கு அதை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (செப்-19) அந்த லாட்டரி சீட்டின் முடிவுகள் வெளியானது. ஆனால் அதை கவனிக்காதவருக்கு அதே கட்டடத்தில் இருக்கும் வேறு ஒரு நண்பர் டிஈ 645465 என்ற சீட்டின் எண்ணை இணையத்தின் மூலம் சரிபார்த்து முதல் பரிசாக ரூ.12 கோடி விழுந்ததை தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சைதல்வி உடனே துபையிலிருந்து கிளம்பி தன் நண்பரிடம் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு அதை வாங்கிய இடத்தில் ஒப்படைக்க இருக்கிறார்.
அயல் நாட்டில் சமையல் பாத்திரங்களைக் கழுவி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த தொழிலாளிக்கு கிடைத்த இந்த பெரிய பரிசுச் செய்தி தான் தற்போது கேரளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த அதிர்ஷ்டசாலிக்கு முதல்பரிசான ரூ. 12 கோடியில், வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ரூ. 7 கோடியே, 56 லட்சம் கைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.