கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு, கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கோவாவில் இதுவரை 17,418 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவா மாநில முதல்வருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‟நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு அறிகுறிகள் இல்லாதக் காரணத்தால், நான் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே எனது கடமையை மேற்கொள்வேன். என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.