மிரட்டும் யாஸ் புயல் – மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் கரையை நெருங்கி வருவதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. யாஸ் புயல் என பெயரிடப்பட்ட இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசாவின் பாரதீப் மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டிய சாகர் தீவுகள் இடையே அதிதீவிர புயலாக நாளை நண்பகல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவின் கேந்திராபாரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு இந்திய வானிலை மையத்தின் தேசிய முன்னறிவிப்பு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Exit mobile version