தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில், 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
தெற்குரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அண்மையில், தெற்கு ரயில்வேயின் சரக்கு வண்டிகளின் பாதுகாவலர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த தேர்வு நடைபெற்றது. 96 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்துவரும் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் மூவாயிரம் தமிழர்கள் பங்கேற்ற நிலையில், வெறும் 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மீதம் உள்ள 91 இடங்களிக்கும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் தொடர்பாக தமிழக எம்.பி சு.வெங்கடேசன் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் பதில் அளித்தார். அப்போது கூறியதாவது, தெற்கு ரயில்வே டெக்னீசியன் பணி நியமனம் பெற்றவர்களில் 66% பேர் இந்தியில் தேர்வு எழுதியவர்கள்.மொத்தமுள்ள 2,556 பணியிடங்களில் 1,686 இடங்களை இந்தியில் தேர்வு எழுதியவர்கள் பெற்றுள்ளனர்.தமிழில் தேர்வு எழுதியவர்களில் 139 பேர் தான் ரயில்வே டெக்னீசியன் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.மொத்த பணியிடங்களில் 5.4% பணிகளே தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு கிடைத்துள்ளது என்றார்.
மத்திய அமைச்சரின் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுக்க தொடங்கியுள்ளது.