உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது, தன் மீது போலீசார் தடியடி நடத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அதில் அந்த பெண்ணின் முதுகு தண்டு பலமாக பாதிக்கப்பட்டதுடன், உண்மையை வெளியே சொல்லாமல் இருக்க அந்த பெண்ணின் நாக்கையும் அந்த கும்பல் துண்டித்தது. படுகாயமடைந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், போலீசாரால் அவசர கதியில் நள்ளிரவில் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் ஆளும் பாஜக தரப்பு குற்றவாளிகளை தப்பிக்க எதுவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், ஹத்ராஸ் கிராமத்திற்கு தடையை மீறி சென்றபோது, ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தடுத்து நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து, ராகுல் காந்தி இறங்கி நடந்தே பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை பார்க்க முயன்றுள்ளார்.
ஊர்வலமாக அவர்கள் சென்று கொண்டிருந்த போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் வந்த தொண்டர்களை உத்திரப்பிரதேச மாநில போலீசாரும் மற்றும் டெல்லி போலீசாரும் சேர்ந்து தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு நிலவியது. தடுத்து நிறுத்தியதன் காரணமாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த தொண்டர்களை தடுக்க முடியாத காரணத்தால் அவர்களை அப்புறப்படுத்த தடியடி நடத்தினர். தொடர்ந்து நடைபெற்று வந்த வாக்குவாதத்தில் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை மீறிச் சென்றதாக ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது ராகுல் காந்தி போலீசாரால் தாக்கப்பட்டு கீழே தள்ளி விடப்பட்தாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் பிரதமர் மோடி மட்டும் தான் நடக்க வேண்டுமா என, ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.