செப்டம்பர் 30 வரை ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சரக்கு ரயில் சேவை மட்டும் தொடர்ந்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கையின் பேரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து, குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
அதையடுத்து, ன்லாக் என்ற பெயரில் ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தாலும் ரயில்சேவைக்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இதனிடையே, ஆகஸ்ட் 12 வரை ரயில்சேவைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு பிறகு ரயில்சேவை அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 30 ம் தேதி வரை பயணிகள் ரயில், விரைவு ரயில், புறநகர் ரயில் சேவைகள் கிடையாது என மத்திய அரசு அறிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரயில்வே அமைச்சம் அத்தகைய முடிவு எதுவும் இதுவரை எடுக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.