பசுவின் சாணத்தை விவசாயிகளிடம் இருந்து விலைக்கு வாங்கும் திட்டத்தை சத்தீஸ்கர் அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 100 கிலோ மாட்டுச் சாணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
சத்தீஸ்கரின் வடக்குப் பகுதி மாவட்டமான கோரியாவில் ரோஜ்கி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் லாலா ராம், சேம் லால் ஆகியோர் தாங்கள் வளர்க்கும் பசுவிலிருந்து கிடைக்கும் சாணத்தைக் கூட்டுறவுக்கு விற்பனை செய்ய சேமித்து வைத்திருந்தார்கள். ஆனால், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் 100 கிலோ சாணத்தை இருவரின் வீட்டிலிருந்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதி முதல்வர் பூபேஷ் பாகல், “கோதான்நியாயயோஜனா”என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி பசுக்களை வளர்ப்போர், பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசு பெற்றுக்கொள்ளும் என அறிவித்திருந்தார்.
இத்திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் கட்டமாக விவசாயிகள், பண்ணை உரிமையாளர்களுக்கு ரூ.1.65 கோடி பணம் கடந்த 5-ம் தேதி வங்கி மூலம் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த ரூ.1.65 கோடி பணம், பசுக்களை வளர்க்கும் 46 ஆயிரம் பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
பசு வளர்ப்பவர்கள் சாணத்தை சேமித்து வைத்து, அதனைப் பசுதான குழுவிடம் அளித்து பணம் பெற்றுச் செல்கிறார்கள். சாணத்துக்குப் பணம் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பசுவின் சாணம் கிராமங்களில் திருட்டுப் போவது அதிகரித்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தை போலீஸாருக்குக் கொண்டு செல்லும் முன், கிராம மக்களே தீர்வு காண வேண்டும் என கோர்யா மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சங்கீத் லக்ரா தெரிவித்தார்.