ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து வரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, இன்று மேலும் ஒரு பா.ஜ.க. மாவட்ட தலைவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது நஜார்.இவர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான முன்னணி தலைவராக இருந்தவர்.
நேற்றுக் காலையில் நடைபயிற்சிக்கு சென்ற இவர் மீது, அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.இதில் அவர் பலத்தக் காயமடைந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல, கடந்த 6-ஆம் தேதி பா.ஜ.க. பஞ்சாயத்து தலைவர் சஜத் அகமது கான்டே, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.
கடந்த ஜூலை மாதம், பா.ஜ.க.வின் முன்னாள் பந்திபோரா தலைவர் வாசிம் பாரி, அவரது தந்தை மற்றும் சகோதரர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 3 பேரும் உயிரிழந்தனர்.
சமீப காலமாகவே ஜம்மு காஷ்மீரில், பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெறுவது அதிகரித்துக் கொண்டே வருகிற நிலையில், மேலும் ஒரு பா.ஜ.க. மாவட்ட தலைவர், பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு ஆளாகி பலியாகி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.