உலகமே ஒரு ஸ்மார்ட் போனில் சுருங்கி விட்ட இந்த சூழ்நிலையில் மக்களும் அந்த போனின் மூலம் அதிகம் செலவிடுகிறார்கள் உணவு, போக்குவரத்து டிக்கெட்கள், மளிகை சாமான்கள் என அனைத்து விதமான பொருட்களையும் ஆன்லைன் மூலம் பெறுகின்றனர்.
ஆன் லைன் எந்த விதத்தில் நன்மை பயகிறதோ அதே வகையில் தீமையும் பயக்கிறது குறிப்பாக சமீப காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு பேசுபொருளாக உள்ளது. இதன் மூலம் பலபேர் பணத்தை இழந்துள்ளனர், சில பேர் தற்கொலையும் செய்துள்ளனர் இதனால் அந்த விளையாட்டை அரசு தடை விதிக்க வேண்டும் என அனைத்து வித மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இதனிடையே தமிழக அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது . மீறி விளையாடுபவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசும் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்துள்ளது இது குறித்து கர்நாடக போலீஸ் அமைச்சர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூரு உள்பட மாநிலத்தில் தற்போது ‘ஆன்லைன் ரம்மி’ உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை ஆடுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றும் இந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவையும் எடுக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டு விபரீதமாக இருப்பதால், அந்த விளையாட்டுகளை விளையாட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்களின் வீடு, பணம், சொத்துகளை கூட இழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர், அவைகளுக்கு தடை விதிக்கும்படி அரசிடமும், போலீசாரிடமும் தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றார்கள். சில இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு கடிவாளம் போடவில்லை எனில், ஏராளமான இளைஞர்களை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தான் ஆன்லைன் ரம்மி உள்ளிட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசு முன்வந்துள்ளது எனக்கூறினார்.
மற்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்காக எந்த விதமான சட்டங்களை கொண்டு வந்துள்ளனர் என்பதை கேட்டு தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறிய அவர் கூடிய விரைவில் கர்நாடகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுவது உறுதி. இதற்காக புதிய சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகின்றது.