விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத்தொகையை 3 மடங்கிற்கு உயர்த்தி இருப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கி, சர்வதேச அளவில் இந்தியாவை பெருமைப்படுத்தும் வீரர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு உதவும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தவர், விளையாட்டு மற்றும் சாகச விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறினார்.
அதன்படி, அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.
இதுவரை கேல் ரத்னா விருதுக்கு ரூ. 7.5 லட்சமும், அர்ஜுனா விருதுக்கு ரூ. 5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு உந்துகோலாக இருக்கும் என விளையாட்டுத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, நடப்பாண்டிற்கான கேல் ரத்னா விருதுக்கு தமிழக தடகள வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.