உலக நாடுகளின் பசிப் பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள 116 நாடுகளிலும் உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 94வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 101வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக முடங்கியிருந்த மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்டு உள்ளனர்.
நமது அண்டை நாடான நேபாள், வங்கதேசம் 76வது இடத்திலும், பாகிஸ்தான் 92வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு பின்னால் பப்புவா நியூகினியா (102), ஆப்கானிஸ்தான், நைஜீரியா (103), காங்கோ (105) ஆகிய சிறிய நாடுகள் மட்டுமே உள்ளன. கடைசி இடமான 116வது இடத்தில் சோமாலியா உள்ளது.
அதேபோல், பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்கியிருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. பட்டினியை ஒழித்த முதல் பத்து நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இடம் பிடித்துள்ளன.
பொதுமுடக்கத்தின் போது பல கோடீஸ்வரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆன கதை இந்தியாவில் நடந்தது. இப்போது ஏழைகள் ஒரு வேளை சாப்பாட்டிற்கு அவதியுறும் நிலையும் இந்தியாவில் தான் உள்ளது.