வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டஸ் உள்ளிட்ட பலர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வருகிறது.
தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி சூர்யா காந்த் , நீதிபதி போபண்ணா ஆகியோர் இவ்வழக்கை விசாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சோசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வழக்கு கூடுதலாக ஒரு விரிவான பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் வியாழன் அல்லது திங்கட்கிழமை வரை அவகாசம் வேண்டும் என கேட்டார். அப்போது, பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் நேரம் வழங்குவதில் எவ்வித ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து வழக்கை செப்டம்பர் 13 ( திங்கட்கிழமை ) க்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, இவ்வழக்கில் ஆகஸ்ட் 17ம் தேதி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. அதன் பின்பு, மத்திய அரசு தரப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் அடங்கி இருப்பதால் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை எனவும் இவற்றை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.