ஊரடங்கு காலத்தில் ஒரு பயனையும் அடையாத ஒரே நாடு இந்தியா மட்டுமே என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ,ஊரடங்கு காலத்தில் ஒரு பயனையும் அறுவடை செய்யாத ஒரே நாடு இந்தியா என்று தோன்றுகிறது என கூறினார்.மேலும் 21 நாட்களில் கொரோனா வைரஸை தோற்கடிப்போம் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, மற்ற நாடுகள் வெற்றி பெற்ற போது இந்தியா மட்டும் ஏன் தோல்வியடைந்தது என்பதை விளக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து மற்றொரு ட்வீட் பதிவில், இந்தியாவில் செப்டம்பர் மாத இறுதிக்குள் சுமார் 55 லட்சம் நபர்கள் கொரோனா நோய்தொற்றுக்கு ஆளாவார்கள் என்று கணித்தேன். ஆனால் செப்டம்பர் 20 ம் தேதிக்குள்ளே நாம் அந்நிலையை அடைந்துவிடுவோம். செப்டம்பர் மாத இறுதியில் 65 லட்சம் பேர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகும் நிலை இருக்கிறது என்றும்,2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏன் இறங்குமுகமாக சென்றது என்பதை மத்திய நிதித்துறை அமைச்சர் தெளிவாக விளக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.