இன்று நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, தேசியக்கொடியை ஏற்றினார்.
இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக சுதந்திர தின விழா மிக எளிமையாக நடைபெறுகிறது.
தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் எனவும் நம்நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி என கூறிய பிரதமர் நாட்டின் பல்வேறு பகுதிகள் இயற்கை பேரிடரால் போர்க்களமாக உள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு மிக்க நன்றி எனவும் மாநில அரசுகளுடன் இணைந்து சிறப்பாக மத்திய அரசு பணியாற்றி வருகிறது எனவும், நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது, போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது எனவும் பன்முகத்தன்மையே நமது பலம் என கூறிய பிரதமர், இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது எனக்கூறினார்.
மேலும் இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம் எனவும் இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது, ஒவ்வொரு இந்தியனும் சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என பிரதமர் தனது உரையில் கூறினார்.