கிருஷ்ணகிரி அருகே லாரியை வழிமறித்து ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு, கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருக்கிறது. இன்று அதிகாலை லாரி மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது, மூன்று லாரிகளில் வந்த மர்ம நபர்கள், செல்போன்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை திடீரென வழி மறித்துள்ளனர். பின்னர், அதில் இருந்த 2 ஓட்டுநர்களையும் கண்ணைக்கட்டி காட்டிற்கு அழைத்துச் சென்று, இருவரின் கை, கால்களையும் கட்டிவிட்டு லாரியை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இதுக்குறித்து லாரி ஓட்டுநர்கள் உடனடியாக சூளகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார், சூளகிரி அளுகுபாவி அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பறிமுதல் செய்து சோத்தித்தபோது, கடத்தல்காரர்கள் செல்போன்களை கொள்ளையடித்துவிட்டு, லாரியை சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.10 கோடி என தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஏடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும், காஞ்சிபுரத்தில் இருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்கள், ஆந்திர மாநிலம் நகரி அருகே கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தில் கொள்ளையர்களை கைது செய்த போலீசார், செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.