PPE உடையில் 15 மணிநேரம் இருந்த நிலையில், டாக்டரின் உடல் எப்படி இருக்கும் என்பதான போட்டோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவில் தற்போது நாள்தோறும் 3 லட்சம் அளவிற்கு புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை, பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாத நிலை, படுக்கைகள், மருந்துகள் இல்லாத நிலை, இந்த பாதிப்பை மேலும் வீரியம் மிக்கதாக மாற்றி உள்ளது. மருத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் களத்தில் என்னென்ன சுமைகளை அனுபவிக்கிறார்கள் என்று எண்ணும்போது, அவர்களை நாம் வாழும் தெய்வங்களாக மட்டுமே கருத வேண்டும் என்பதில் யாரும் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
கொரோனா வார்டில் பணிபுரிந்த ஒரு மருத்துவர், 15 மணிநேரம் PPE உடை அணிந்திருந்த நிலையில், அதை அவர் கழட்டியபோது, அவரது உடல் எப்படி இருந்தது என்ற போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாக்டர் சோஹீல், என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஏப்ரல் 28 ஆம் தேதி, தனது இரண்டு படங்களை பதிவிட்டு உள்ளார். ஒரு போட்டோவில், PPE உடையுடனும், மற்றொரு போட்டோவில், PPE உடை கழட்டிய நிலையிலும் உள்ளது. இந்த போட்டோக்கள் அடங்கிய டுவிட்டர் பதிவிற்கு, டாக்டர் சோஹீல், நாட்டிற்காக சேவை செய்வதில் பெருமை கொள்கிறேன் என்று தலைப்பு இட்டுள்ளார்.
இந்த போட்டோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இந்த பதிவு, ஆயிரக்கணக்கான ஷேர்கள் மற்றும் லைக்குகளை பெற்றுள்ளது.