பண்டிகை காலத்தின்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
டெல்லி சிறப்பு பிரிவு போலீசார், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமீபத்தில் நடத்திய அதிரடி சோதனையின் போது, ஆறு பயங்கரவாதிகளைக் கைது செய்தனர். அவர்கள் ஜான் முகமது ஷேக், ஒசாமா, மூல்சந்த், ஸீஷான் குவாமர், முகமது அபூபக்கர், முகமது அமிர் ஜாவேத் என்பது தெரிய வந்தது. இதில், ஒசாமா மற்றும் குவாமர் ஆகியோர் சமீபத்தில் பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் இடம் பயிற்சி பெற்றுள்ளதும்,வெடி பொருட்களைக் கையாள்வது, ஏகே – 47 உள்ளிட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால், மக்கள் கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளில் பயங்கர தாக்குதல்கள் நடத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சக்தி வாய்ந்த ‘டிபன் பாக்ஸ்’ வெடிகுண்டுகளை வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள கிராமத்தில் கையெறி குண்டுகள், சக்தி வாய்ந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு உள்ளிட்டவற்றை காவல்துறையினர் சமீபத்தில் கைப்பற்றினர். கபூர்தலா பகுதியிலும் டிபன் பாக்ஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பஞ்சாபில் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், டார்ன் டரான் மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில் கார் ஒன்றை காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. காரில் இருந்த கமல்ப்ரீத் சிங் மன், குல்வீந்தர் சிங், கன்வர் பால் சிங் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.