ச
அக்டோபர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்றின் பரவல் அதிகரித்த போது விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவிலும் முதலில் சர்வதேச விமானங்களில் தொடங்கி உள்நாட்டு விமானங்கள் வரை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவலை மதிப்பாய்வு செய்த பின்னர் தேவைக்கு ஏற்ப மட்டுமே விமான சேவை இயக்கம் தொடங்கியது. அதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் குறிப்பாக இ-போர்ட்டல் மூலம் மருத்துவ தேவை, அவரச பயணங்கள் உள்ளிட்டவற்றிக்கு மட்டுமே வெளிநாட்டு பயணிகளுக்கு இந்திய விசா வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இரண்டாம் அலைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தினால் சுற்றுலா விசா வழங்க பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின்னர் அக்டோபர் 15ம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கான சுற்றுலா விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிசினஸ் விமானம் “Chartered flights” மூலம் இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அக்டோபர் 15 முதல் சுற்றுலா விசாவும், மற்ற விமானங்களில் வரும் வெளிநாட்டினருக்கு நவம்பர் 16ம் தேதி முதல் விசா வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விசாக்கள் மூலம் இந்தியா வருவோர் கட்டாயம் இந்தியாவில் நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.