வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டி உள்ளிட்ட அம்சங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் முகாமிட்டு பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த லட்சகணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு மத்தியில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளை பொறுத்த வரையில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர்.
இதனிடையே விவசாய சங்கங்கள் இன்று நடத்திய பாரத் பந்த்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. எதிர்கட்ச்சிகள் ஆளும் 11 மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவிலும் ஆதரவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், விவசாயிகளுடன் இன்று இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ள நிலையில், அமித்ஷா விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களிகள் சில மாற்றங்களை கொண்டு வரவும், அதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.