கங்கை நதியில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து பீகாரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரியில் உள்ள இந்திராபுரி தடுப்பனையில் இருந்து சோனே ஆற்றில் நொடிக்கு சுமார் 60 ஆயிரம் கனா அடி நீர் திறந்து விடப்படுவதால், கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டுள்ளது.
இதனால், மொகாமாவின் ஹதிதான் பகுதியில் நீர்மட்டம் அபாய கட்டத்தை காட்டிலும் சுமார் 21 செ.மீ உயரத்திலும், பாட்னாவின் காந்தி காட்டில் சிவப்பு குறியை காட்டிலும் 11 செ.மீ உயரத்திலும் வெள்ளம் பாய்கிறது. குறிப்பாக, காந்தி காட்டில் மட்டும் கடந்த 12 மணி நேரத்தில் கங்கையின் நீர்மட்டம் 5 செ.மீ உயர்ந்துள்ளது.
இதே போன்று பீகாரின் இதர நதிகளான கன்டக், புர்ஹி, பாகமதி, கோசி, மகாநந்தா உள்ளிட்ட ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடான நேபாளத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரும் அளவுக்கு நீர் திறந்து விடப்பட்டு அதன் வெள்ளம் பீகாரின் பெரும் பகுதியை நீரில் மூழ்கச் செய்துள்ளது. இதுவரை மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 81 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நாட்களில் இந்த வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக கங்கையாற்றின பல்வேறு படித்துறைகளில் நீராட வேண்டாம் என்று பொதுமக்களிடம் பாட்னாவில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.