இந்தியாவின் புதிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடு மே மாதம் 25ம் தேதியுடன் முடிவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசின் புதிய விதிகளை அமல்படுத்த ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் 6 மாத காலம் அவகாசம் கேட்டிருந்தன. எனினும், இதுவரை அமெரிக்காவில் உள்ள தலைமை நிறுவனங்களிடம் இருந்து எந்தவித அறிவுறுத்தல்களும் இந்தியாவில் உள்ள அதன் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
இதனால் புதிய விதிகளுக்கு இணங்காத அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் இந்தியாவில் டிவிட்டர்,பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பேஸ்புக், டிவிட்டர் பயனாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனால், இந்தியாவை சேர்ந்த கூ ஆப் மட்டும் புதிய சமூக ஊடக வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக தெரிவித்துள்ளது.