மாநிலங்களவையிலி்ருந்து வரும் நவம்பர் மாதம் 11 எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அவைத்தலைவர் வெங்கைய நாயுடு அவர்களுக்கு பிரியா விடை அளித்தார்.
நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்றுடன் அவை முடிவுறும் நிலையில், நவம்பர் மாதம் ஓய்வு பெறும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 11 எம்.பி.க்களுக்கு இன்று பிரியா விடை அளிக்கப்பட்டது. ஓய்வு பெறும் எம்.பி.க்களில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் பூரி, சமாஜ்வாதிக் கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. வீர் சிங், காங்கிரஸ் கட்சி எம்.பி. ராஜ் பப்பார் ஆகியோருடன், சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி.க்கள் ஜாவித் அலி கான், ரவி பிரகாஷ் வர்மா, சந்தர்பால் சிங் யாதவ், காங்கிரஸின் பி.எல்.பூனியா, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. ராஜாராம், பாஜகவின் நீரஜ் சேகர், அருண் சிங் ஆகியோர் அடங்குவர்.
இதுதொடர்பாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், “நவம்பரில் அவையிலிருந்து 11 எம்.பி.க்கள் விடை பெறுகின்றனர். அவர்கள் பலர் மீண்டும் அவைக்குத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஓய்வு பெறும் எம்.பி.க்கள் விருப்பப்பட்டால் பேசலாம்” எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் அவையை புறக்கணித்துள்ள நிலையில், சமாஜ்வாதிக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்.பி. நீரஜ் சேகர் பேசுகையில், “நல்வாய்ப்பாக முதலில் மக்களவைக்கும் பின்னர் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் குழந்தையாக இருந்தபோது என்னுடைய தந்தையும், முன்னாள் பிரதமருமான சந்திரசேகருடன் அவைக்கு வந்துள்ளேன். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஓடி விளையாடியிருக்கிறேன். அப்போது இந்த அளவுக்குக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இப்போது நான் எம்.பி.யாக இங்கு வந்திருக்கிறேன். நான் அனைவரையும் பிரியநேர்கையில் வருத்தமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
மாநிலங்களவை இன்றுடன் முடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரை அக்டோபர் 1-ம் தேதிவரை 18 நாட்கள் தொடர்ந்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
ஆனால், கரோனாவில் அடுத்தடுத்து பல எம்.பி.க்கள் பாதிக்கப்பட்டதால், அவர்களின் பாதுகாப்புக் கருதி கூட்டத்தொடரைப் பாதியிலேயே முடித்துக் கொண்டது.