ஆந்திராவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அவரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் சட்டெனபள்ளி பகுதியில் 28 வயதான வாலிபருக்கும் அவரது தாயாரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் கொரோனா உறுதியானதால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக நல்லெண்ணத்தின் அடிப்படையில், வீட்டு உரிமையாளர் உள்பட அருகில் உள்ள அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு சொல்லிவிட்டு வந்துள்ளார்.
ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாமல் அவரைப்பின் தொடர்ந்து வந்த வீட்டின் உரிமையாளர், கொரோனா தொற்று உறுதியான நபர் மற்றும் அவரது தாய் இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் எந்தவித அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யமுடியாமல் தவித்து வந்த அவர்கள், செல்பி வீடியோ மூலம் ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், வாடகை வீட்டில் பூட்டி வைத்த இரு நபரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளரையும் எச்சரித்து விட்டுவந்தனர். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வீட்டு உரிமையாளர்கள் குறித்து தகவல்களை அரசுக்கு அளிக்குமாறு ஆந்திர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பலர் வருமானமின்றி தவித்து வந்த நிலையில், அவர்களிடம் வாடனை வசூலிக்க கூடாது எனவும், வீட்டினை விட்டு வெளியேற்றக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.