30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை, சீனா இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராகவும், சீனா மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளன. ஆண்டு தோறும் சுமார் 4 கோடி டன் அரிசியை இறக்குமதி செய்யும் சீனா, தரத்தை காரணமாகக் கூறி இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை தொடர்ந்து தவிர்த்து வந்தது.
இந்த சூழலில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து முதன்முறையாக சீனா அரிசி கொள்முதல் செய்துள்ளது.
அந்நாட்டின் பாரம்பரிய அரிசி சப்ளையர்களான தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உபரி விநியோகம் காரணமாக ஏற்றுமதியை குறைத்ததால் சீனா இந்தியாவிடம் இருந்து அரிசியை இறக்குமதி செய்துள்ளது.
இதனிடையே, இந்திய விலைகளுடன் ஒப்பிடும்போது, அந்நாடுகளில் ஒரு டன்னுக்கு குறைந்தது 30 டாலர்கள் அதிகம் இருப்பதும் முக்கிய காரணம் என இந்திய அரிசி வர்த்தக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்திய வர்த்தகர்கள் டிசம்பர்-பிப்ரவரி வரை ஒரு டன்னுக்கு 300 டாலர் மதிப்பில் 100,000 டன் உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தரத்தின் அடிப்படையில் இந்த இறக்குமதி அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எல்லை பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது