சாலை விபத்துக்கள், லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும், ஆன்லைனில் பதிவேற்றி சேமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உலக அளவில் சாலைவிபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
அதிகப்படியான மக்கள் தொகையை கொண்டுள்ள இந்தியாவில், சாலை விதிகள் பொதுமக்களால் முறையாக கடைபிடிக்கப்பிடுவது இல்லை. மதுபோதையில் வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதும் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், சாலை விபத்துக்களையும், போக்குவரத்து விதி மீறல்களையும் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சாலை விதிமுறைகள் தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் மூலம் கையாள முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், வாகன ஓட்டிகளின் லைசன்ஸ், பெர்மிட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆன்லைனில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் செய்யும் விதிமீறல்கள், அவர்கள் ஏற்படுத்தும் விபத்துகள், உள்ளிட்டவைகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படவும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் சட்டம் கடுமையாக்க படுவதால், ஆவணங்கள் அழியவோ அல்லது தொலையவோ வாய்ப்பு இல்லாததால் பொதுமக்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள். அதேபோல் காவல்துறை தரப்பிலும் அடிக்கடி வைக்கப்படும் குற்றச்சாட்டான லஞ்சம் முறை ஒழிக்கப்படும்.
அனைத்தும் ஆன்லைனில் தரவேற்றம் செய்யப்படுவதால் குற்றங்கள் குறைந்து சட்ட ஒழுங்கு நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.