மூணாறு அருகே பெட்டிமுடியில் நடந்த கோர நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், அங்கு வசிக்கும் நாய் தன்னை வளர்த்தவர்களை காணாமல், கடந்த 3 நாட்களாக தேடி வருகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 7- ஆம் தேதி இரவு விடிய விடிய பெய்த பலத்த மழையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப்பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் அவர்கள் வசித்த பகுதி முழுவதுமாக மண்ணால் மூடப்பட்டுள்ளதால், அனைவரும் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.பலர் இன்னும் மீட்கப்படாத நிலையில், பணிகள் துரிதமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் கடந்த 3 நாட்களாக நாய் ஒன்று அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டு வருகிறது.தன்னை வளர்த்தவர்களை காணாத நிலையில், அவர்களை தேடி சோகத்துடன் சுற்றி வருவது, காண்போரின் நெஞ்சை கண் கலங்க வைக்கிறது.அந்த இடத்தில் சிதறி கிடக்கும் துணிகளை மோப்பம் பிடித்து தனக்கு அருமையானவர்களை தேடி வருகிறது.யாரேனும் உணவு அளித்தாலும் சாப்பிட மறுக்கிறது என்று அங்குள்ளவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
யார் புரிய வைப்பது?? இயற்கை செய்த சதியை!!….