டெல்லியை சேர்ந்த விவசாயி ஒருவர் மனித நேயத்துடன் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளர்களை மீண்டும் வரவழைக்க 1 லட்ச ரூபாய் செலவழித்து விமான டிக்கெட்களை எடுத்துக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி திஜிப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பப்பன்சிங் என்பவர் ஆண்டு தோறும் தனது நிலத்தில் ஆகஸ்டு மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை காளான் விளைவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவரது நிலத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் வேலை செய்து வந்தனர். கொரோனா காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை நேரிட்டது. இந்த நிலையில் தான் பப்பன்சிங் என்ற விவசாயி கடந்த மே மாதம் 68 ஆயிரம் ரூபாய் செலவழித்து தன்னிடம் பணியாற்றிய பீகார் மாநில 10 தொழிலாளர்களை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். முதன் முறையாக விமானத்தில் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
இந்நிலையில், மீண்டும் காளான் விதைப்பு பருவம் ஆரம்பித்துவிட்டதால், ஏற்கனவே தன்னிடம் பணியாற்றி 10 பீகார் தொழிலாளர்களுடன் மேலும் 10 பேரை வரவழைக்க விவசாயி பப்பன்சிங் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ரூபாய் 1 லட்சம் செலவழித்து விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். விமானத்தில் பயணிக்கிறோம் என்ற சந்தோசம் தொழிலாளர்களுக்கிடையே அளப்பெரியதாக காணப்பட்டுவருகிறது.
“ ஒரு ஏக்கரில் தான் காளாண் விவசாயம் செய்கிறார் விவசாயி பப்பன்சிங், ஆனாலும் தன்னிடம் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ள தொழிலாளர்களை, அவரது சொந்த குடும்ப உறுப்பினராக கருதி விமான டிக்கெட்டுகளை எடுத்து தந்திருக்கும் இந்த இந்த முயற்சி அனைவராலும் பாராட்டினைப்பெற்றுள்ளது. மனித நேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கிவருகிறார் டெல்லியை சேர்ந்த இந்த விவசாயி!…