வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திட்டமிட்டபடி நாளை விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த இருக்கின்றனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், சுமார் இரண்டு மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், விவசாய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மிகப் பெரியளவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த டிராக்டர் பேரணிக்கு காவல் துறையினரும் அனுமதி அளித்தனர். தலைநகர் டெல்லியில் ஐந்து எல்லைகளிலிருந்தும் இந்த டிராக்டர் பேரணி தொடங்கவுள்ளது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த பிறகு, டிராக்டர் பேரணி தொடங்கும்
என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் குவிந்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பேரணிக்காக தயார் நிலையில் 2 லட்சம் டிராக்டர்கள் உள்ளன. காசிப்பூரில் 2 கி.மீ., தொலைவுக்கு அணிவகுத்துள்ளன. தமிழக விவசாயிகள் ஏராளமானோர் பேரணியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நோக்கில் இந்த டிராக்டர் பேரணி நடத்தப்படுகிறது.