திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பல்வேறு கட்டுபாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
திரையரங்குகளை பொருத்தமட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வரும்பொழுது அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும். ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் மற்றும் பணம் செலுத்துவது ஊக்கப்படுத்தபடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சி திரையிடப்பட்ட பிறகு மறு காட்சி இடைவெளி என்பது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் திரைப்பட காட்சி முடிந்த பிறகு ஒவ்வொரு வரிசையாக பார்வையாளர்கள் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும், திரையரங்குக்குள் 24 முதல் 30 டிகிரி வரை ஏசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் அக்கறை எடுத்து பாதுகாக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரேனும் கொரோனா அறிகுறியுடன் திரையரங்குக்குள் வந்தால் அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு திரைப்படங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கேற்ற முடிவுகளை மாநில அரசு சார்பில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் குறியீடுகள் கண்டிப்பாக இடம்பெறவேண்டும். முக்கியமான இடங்களில் கிருமிநாசினி வைக்கவேண்டும். முடிந்தவரை உணவுகளை புக்கிங் செய்ய பார்வையாளர்களுக்கு க்யூ ஆர் குறியீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.