– ப. தேவி
ஒரு வாரமே உள்ளது திருமணத்திற்கு. இன்னும் அரசனுக்கு பத்திரிக்கை கொடுக்கும் வேலை முடியவில்லை. அலுவல் பணியின் காரணமாக, அவனுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. இப்போது தான் ஊருக்கு வந்துள்ளான். அவனுக்கு தெரிந்தவர், அறிந்தவர் என்று, இன்னும் பலருக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டி இருந்தது.
உறவினருக்கு எல்லாம், வீட்டில் உள்ளவர்கள் அழைப்பிதழ் தருவார்கள். அதனால் ஒரு பாதி வேலை அவனுக்கு மிச்சம். இப்போதுக் கூட, அழைப்பிதழ் கொடுத்து விட்டு தான், வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டு இருக்கிறான்.
பாக்கெட்டில் இருந்த ஃபோன் ஒலித்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, யார் என்று எடுத்து பார்த்தான்… அம்மு என்று காட்டியது அலைபேசி, நாள் முழுவதும் அலைந்து விட்டு வந்த சோம்பலையும் மீறி, முகத்தில் ஒரு மெல்லியப் புன்னகை வந்தது, ஓ… மணி பத்து ஆகிவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
சொல்லு அம்மு… என்றான் அரசன்..
‘நான் பேச மாட்டேன்…’
பேசமாட்டனா… எதுக்கு எனக்கு ஃபோன் பண்ண?…
ஆங்… அது வந்து… ஆங்… நான் உன் மீது கோவமா இருக்கேன், உன்னுடன் பேசமாட்டேன் என்பதை, எப்படி உனக்கு தெரியப்படுத்துவது என்றாள்…
வாய்விட்டே சிரித்துவிட்டான் அரசன். சரி சரி விடு… என் மீது என்ன கோவம் சொல்லு என்றான்.
ஏன் எனக்கு நீங்க ஃபோன் பண்ணவே இல்ல… அதான் என்றாள்.… அப்படி-னா என் மீது பாசமே இல்ல, அதான…..
அப்படி எல்லாம் இல்ல டா… கொஞ்சம் வேலை அதிகம்… போகும் இடம் எல்லாம் பேசி, பேசி… அப்படியே நேரம் ஆகிடுது. எப்பவாது ஒரு தடவை தான் நான் ஊருக்கு வருவது… என்ன பண்ணுறது, எல்லாரையும் பாக்கனும் இல்லயாடா என்றான்…..
சரி வீட்டுக்கு போயிட்டு ஃபோன் பண்ணுங்க என்றாள் அம்மு.. சரி என்றான் அரசன். வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தினான். அவனுடைய அம்மா, அப்பா துங்கிக்கொண்டு இருந்தார்கள். குழாய் அடியில் போய் கை, கால் கழுவிக்கொண்டு வந்தான். சமையலறை சென்று தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து சாப்பிட்டான். பிறகு, பாய் தலையனை எடுத்துக்கொண்டு, மாடி மேல் சென்று படுத்தான். வானத்தை பார்த்துக் கொண்டு படுப்பது, அரசனுக்கு பிடிக்கும். சுற்றிலும் மரங்கள், மலைக்காற்று, நிலா, நட்சத்திரம் என்று பார்த்துக்கொண்டு தூங்குவது அவனுக்கு பிடிக்கும்.
அம்முக்கு ஃபோன் பண்ணுவதற்க்கு போன் எடுத்துப் பார்த்தான். மணி 11… இருந்தாலும் ஃபோன் பண்ணினான்… ஆனால் அம்மு எடுக்கவில்லை. முகத்தில் புன்முறுவலோடு, தூங்கிவிட்டு இருப்பாள் என்று நினைத்துக் கொண்டான். பத்து மணி வரை அவள் விழித்துக் கொண்டு இருந்ததே ஆச்சரியம். முதன் முதலில் அவளோடு பேசும் போதே, 8.30 மணிக்கெல்லாம் நான் தூங்கிடுவேன் என்றாள். இப்போது கொஞ்சம் நாளாக எனக்காக விழித்திருக்கிறாள். நமக்காக ஒருத்தர் தன்னுடைய பழக்கத்தை மாற்றிகொள்கிறார்கள் என்றால், அது நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் தானே…
ஆழ்ந்த பெருமுச்சு விட்டு, இமைகளை மூடி, இதயத்தை திறந்தான். அங்கே அன்பு நிறைந்த பார்வையுடன், அம்மு நின்று இருந்தாள். கடந்த பதினேழு வருடங்களாக, நலமா இருக்கியா?, சாப்டியா?, நேரத்துக்கு சாப்பிடு, நேரத்துக்கு தூங்கு, என்ன செய்யுற?, அப்படி செய்யாத, இப்படி செய்… என்று அன்பாகவும், அக்கறையகவும் யாரும் சொன்னதும் இல்லை, கட்டளைப் பிறப்பித்ததும் இல்லை. அம்மு என்று ஒருத்தி வரும் வரை.
பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் தான். இது நிச்சயதார்த்தத்துக்கும், திருமணத்துக்கும் இடையில் நான்கு மாதம் இடைவெளி. இந்த நான்கு மாதமாக தான், எனக்கும் அவளுக்கும் பழக்கம். கடந்த பதினேழு வருடமா, காய்ந்துப் போய் இருந்த மனதில், அன்பையும், ஆசையையும் நீர் ஊற்றிப் பயிரிடத் தொடங்கி இருக்கிறாள். அடிக்கடி சண்டையும் போடுவாள். சண்டை போட்டு, பேசி வெற்றி பெறுவதும் அவளே, சண்டை போட்டு பேசாமல் இருந்து வெற்றி பெறுவதும் அவளே…
அம்மு என்னோடு சண்டை போட ஒரே காரணம், அவளின் இந்த ஒரு கேள்வி தான் “ஏன் எனக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுவது இல்லை?”
இந்த கேள்விக்கான பதில், அவள் என்னிடம் எதிர்பார்க்கிறாள். ஆனால் அவளுக்கான உண்மையான பதிலை எப்படி சொல்வேன். அம்முவை முதன் முதலில் பெண் பார்க்கப் போன போது, மாநிறம் ஒல்லியான உருவமா இருந்தாள். நான் திருமணம் செய்துக்கொள்ளும் பெண், அழகா, கொஞ்சம் குண்டா, நல்ல கலரா இருக்கும் பெண்ணை பார்க்கணும் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததற்க்கு நேர்மாறாக இருந்தாள், அம்மு… இருந்தாலும் எனக்கு அம்முவைப் பிடித்து இருந்தது. வாழ்க்கைக்கு அழகை விட, அன்பு தான் முக்கியம் என்று நினைத்தேன். இவள் என்னை நல்லா பார்த்துக்குவா என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.
ஃபோனில் மெசேஜ் வரும் சத்தம் கேட்டது. ஃபோன் எடுத்து பார்த்தான் அரசன். மணி 12… ஃபோனை எடுத்துப் போய், கீழே சார்ஜ் போட்டு வந்து, மறுபடியும் வந்து இமைகளை மூடினான், அரசன். இதய வாசலில் அம்மு இருந்தாள். அவளை மார்போடு சேர்த்து அணைத்து கொண்டு, இதயத்தின் உள்ளே பார்வையை செலுத்தினான், அரசன். அங்கே இதயத்தின் ஆழத்தில் ஒர் மங்கலான உருவம் தெரிந்தது. அது அவளேதான். பதினேழு வருடங்களுக்கு முன், இந்த இதயத்தை ஆட்சி செய்தவள்… அவள் இன்னுமா இங்கு இருக்கிறாள்… கண்களின் ஈரம்… கன்னங்கள் உணர்ந்தன..
அரசனுக்கு பதினேழு வயது… பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான். அப்போது தான் அவளை முதன் முதலாக சந்தித்தான். அந்தப் பள்ளிக்கு அந்த வருடம் தான் அவள் புதிதாக வந்தாள். வகுப்பிலே நல்லா படிக்கும் மாணவன் அரசன் என்பதால், அனைவருக்கும் அரசனைப் பிடிக்கும். பாட சந்தேகங்களை அவனிடம் கேட்பார்கள். அவளும் அப்படித்தான் அரசனிடம் பேச தொடங்கினாள். நாளடைவில், அதுவே அவர்களின் காதலுக்கு வழி வகுத்தது.
பதினேழு வயது ஆண்பிள்ளை… தன்னை ஒருத்தி உயிராக நினைக்கிறாள் என்ற எண்ணமே, அரசனுக்கு இனிமையாக இருந்தது. மதியத்தில் அவனுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வருவாள். இருவரும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள். பள்ளியில் அவர்கள் இருவர் பற்றியும் அனைவருக்கும் தெரிந்து, நண்பர்கள் தோழிகள் கேலி கிண்டல் செய்யும் அளவுக்கு சென்றது, அவர்களின் காதல். மற்றப் பெண்களிடம் பேசினால் பொறாமைக் கொண்டு சண்டை பிடிப்பாள். மீண்டும் அவளை சமாதானம் செய்யவே இரண்டு நாட்கள் ஆகும். அதுவரை பேசமாட்டாள். அந்த நேரங்களில் அரசனுக்கு மரண வலியே, இதைவிடக் குறைவாக இருக்கும் என நினைப்பான்.
அரசன் அழுது, கெஞ்சி, மன்னிப்பு கேட்கும் வரை பேசமாட்டாள். அதன்பின் பேசுவாள். சில நேரங்களில் அரசன் நினைப்பது உண்டு, இந்தப் பிடிவாதக் குணம் நம் வாழ்க்கையே பாதிக்கும் என்று. ஆனால், தனிமையில் அவளுடன் பேசும் போது அனைத்தையும் மறந்துவிடுவான். எதிரில் இருப்பவரை மதிமயக்கி, நீ சொல்லுவது சரி என்று, அவர்கள் வாயாலே சொல்ல வைப்பாள், அந்த அளவுக்கு இருக்கும் அவள் பேச்சு.
அடிக்கடி அவள் சொல்லுவாள், ‘நான் சாகும் போதும் உன் மடியிலேயே சாகணும்’ என்று… அந்த ஒரு வார்த்தைக்கு, இந்த உலகத்தையே அவள் காலடியில் போடலாம் என்று நினைப்பான். அவன் வாழ்க்கையில் தென்றல் போல் மென்மையாக காற்றைத் தந்துக் கொண்டு இருந்த அவள், புயல் காற்றாக மாற தொடங்கினாள். கொஞ்சம், கொஞ்சமாக அரசனை விட்டு விலகினாள்.
பேசுவது குறைந்துப் போனது. இப்போது எல்லாம் மதியம் சாப்பாடு கூட அரசனுக்கு கொண்டுவருவது இல்லை. தனிமையில் சாப்பிட்டாள். அரசன் அருகில் சென்றால், தோழிகளுக்கு அருகில் சென்று விடுவாள். அரசன் தனிமையில் வாடினான். ஒரு நாள் மாலையில், அவளிடம் கேட்டேவிட்டான்… ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய் என்று. முதலில் பேசத் தயங்கியவள், பின் பேசினாள்… பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு வருது… அதனால் நான் படிக்க வேண்டும்… கொஞ்ச நாள் தனித்தனியாக நாம படிக்கலாம்… தொந்தரவு செய்யாதே… என்று கூறி சென்றுவிட்டாள். அவள் எப்போதும் போல மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். ஆனால், அரசன் தனிமையில் வாடினான்… நண்பர்களை விலக்கினான்… படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை… இவ்வாறு ஒரு மாதம் சென்றது, அதன்பின் சுத்தமாகவே பேசுவதை நிறுத்திவிட்டாள்.
பள்ளியில் செய்முறை தேர்வுகள் முடிந்து, விடுமுறை விட்டுள்ளனர். இதனால் அவளை பார்க்கக்கூட முடியவில்லையே என்று மனம் வருந்தினான். ஒருநாள் பள்ளிக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் அமர்ந்து இருந்தான். அவளின் ஊர்க்கார பையன் கார்த்திக், அரசன்-க்கு அருகில் வந்தான். கார்த்திக் கூறிய வார்த்தைகள், அரசனின் இதயத்தையே நொருக்கிவிட்டது. தேர்வு முடிந்ததும், அவளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்றுக் கூறினான். அவளின் விலகலுக்கான காரணத்தை அறிந்து துடிதுடித்துப் போனான், அரசன். அதன் பின் அவளை சந்தித்துப் பேச, அவன் எடுத்த முயற்சி எல்லாம் தோல்வியில் முடிந்தது. கடைசித் தேர்வு அன்று, அவளிடம் கெஞ்சி, சிறிது நேரம் பேச சம்மதம் சொன்னாள். நான் பேசுவதைக் கேட்க அவள் வரவில்லை. அவள் சொல்லுவதை நான் கேட்கவே, எனக்கு அனுமதி தந்தாள்.
“நான் எடுத்த முடிவு உனக்கு வருத்தமாக தான் இருக்கும். ஆனால் இதுதான் எதார்த்தம்.. புரிந்துகொள்… இப்ப வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை, அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர். மேலும் “இப்பத்தான் உனக்கு பதினேழு வயது ஆகுது. இனிமேல் ஒரு பட்டப்படிப்பு முடித்து, வேலையில் சேர்ந்து, நிலையான வருமானம் வர, இன்னும் ஐந்து வருடங்களாவது ஆகும். அதுவரை எங்கள் வீட்டில் எனக்கு திருமணம் செய்யாமல் காத்திருக்கமாட்டாங்க. அதனால் இப்ப பார்த்திருக்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்ய சம்மதம் சொல்லிட்டேன். இனி தொந்தரவு செய்யாதிங்க” என்று கூறி சென்று விட்டாள்.
அரசன் அந்த இடத்திலேயே சிலைபோல் இருத்தான். வகுப்பிலேயே முதல் மாணவனாக இருந்தவன், அந்த ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தான். அவன் தோற்றது தேர்வில் மட்டுமா?… அவன் வாழ்க்கையிலும் தான் என்பதை, அவளின் திருமண நாள் அன்று உணர்ந்தான். ‘நான் சாகும் போதும் உன் மடியிலேயே சாகணும்’ என்று கூறியவள், இன்று தன் உடலையும், உயிரையும் வேறு ஒருவருக்குத் தர தாயாராகிவிட்டாள் என்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் ஊரை விட்டே சென்று விட்டான். படித்தது, வேலைப் பார்ப்பது எல்லாமே மதுரை தான். இப்ப திருமணத்திற்காக தான், சொந்த ஊருக்கு வந்து இருக்கிறான். திருமணம் முடிந்ததும் அம்முவையும் மதுரைக்கு அழைத்துக்கொண்டு போயிடுவேன் என்று கூறி தான், திருமணமே உறுதி செய்தான்.
அரசனின் மனதில் இருந்தக் காதல் என்னும் மலரை, அமிலம் கொண்டு அழித்து, பாலைவனமாக்கி சென்றாள் அன்று ஒருத்தி. இன்று அம்மு அந்த பாலைவனத்தில், அன்பு என்னும் நீர் ஊற்றி பாலைவனச் சோலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறாள். அவளிடம் பட்ட வலியின் காரணமாகத்தான், அம்முவிடம் அதிகம் பேசுவது இல்லை.
பேசி பேசி மதிமயக்கி விடுவாளோ என்ற எண்ணம் முதலில் இருந்தது. அம்முக்கு செல்லம் கொடுக்கக் கூடாது. அம்முவை தன் கட்டுபாட்டுக்குள், அதிகாரத்துக்குள் வைத்து இருக்கணும் என்று எண்ணினான். ஆனால், அம்முவின் குழந்தை தனத்துக்கு முன், அவன் எண்ணங்கள் மறைந்துப் போனது. அம்மு இப்பப் போல எப்பவும் குழந்தைத் தனத்துடன் மகிழ்ச்சியா இருக்கனும் என்றால், தன் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை தெரியபடுத்தக் கூடாது என்று உறுதிக் கொண்டான். நினைவுகளின் அலைகளில் அரசன் அப்படியே உறங்கிவிட்டான்.
இன்னும் சற்று நேரத்தில், அம்மு திருமதி அரசன் ஆகப்போகிறாள். அரசனின் திருமணம், தமிழ் முறைப்படி நடைபெறுகிறது. மாங்கல்யம் கையில் வாங்கியதும், எல்லாம் வல்ல ஈசனே… என் மொத்த அன்பும் அம்முக்கு கொடுப்பேன்… இவளின் அன்புக்கு உண்மையானவனாக இருப்பேன்… இப்ப இவளின் அகத்திலும், புறத்திலும் இருக்கும் மகிழ்ச்சியை, எப்பவும் நிரந்தரமாக இருக்க, நான் காரணமாக இருக்க ஆசி வழங்கி… எங்கள் மணவாழ்க்கை, நல்லறமாக இருக்கவும் வேண்டுகிறேன்… என்று மனதில் பிராத்தனை செய்துக் கொண்டு, அம்முவின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான். இப்ப அரசனின் இதயம் முழுவதும் அம்முவே நிறைந்து இருந்தாள். அந்த மகிழ்ச்சியுடன், அம்முவின் நெற்றியில் குங்குமம் வைத்தான்.
அவள்… அவள்.. என்றே சொன்னேன், அவள் பெயரை சொல்லவில்லையே….
அவள் பெயர்…. வேண்டாம் இனி, அவள் பெயரை சொல்ல மட்டும் இல்ல, எழுதக் கூட எனக்கு விருப்பம் இல்லை…
ஆனால் இதைச் சொல்ல வேண்டும்…. என் அம்மு பெயரும் மூன்று எழுத்து…. அவள் பெயரும் மூன்று எழுத்து….
– கதைப் படிக்கலாம் – 24
இதையும் படியுங்கள் : மூதின் மகள்