– தேன்தமிழன்

“இந்த சனியன் புடிச்ச அடுப்பு, எப்படி ஊதினாலும் பத்த மாட்டேங்குதே” என்று திட்டிக்கொண்டே இன்னும் நான்கைந்து சுள்ளிகளை அடுப்பில் வைத்து, ஆறாவது தடவையாக ஊதினார் பொன்னுசாமி கிழவர்.
பொன்னுசாமி கிழவருக்கு ஏறத்தாழ எழுபத்தைந்து வயதிருக்கும். ஒல்லியான நீண்ட உருவம்; கருத்த உடல்; இலவம் பஞ்சைப் போன்ற நரைத்த முடி; ஒளியிழந்த கண்கள்; ஒட்டிய கன்னங்கள். அவரது மனைவி அஞ்சலை இறந்தப்பிறகு பாவம் அவர் நொந்துதான் போய்விட்டார்.
காலையில் எழுந்து, தட்டுத் தடுமாறி, ஆத்துப்பக்கம் வெளிவாசல் போய்விட்டு, வீட்டிற்கு வந்து, வாசல் பெருக்கி, பக்கத்திலிருக்கும் பொது குடிநீர் குழாயில் இரண்டு குடம் தண்ணீர் பிடித்து முடிப்பதற்குள், காலை எட்டுமணியாகி விடும் அவருக்கு.
அதற்குமேல் வீட்டுவாசலில் உள்ள அடுப்பைப் பற்ற வைத்து, அரை ஆழாக்கு அரிசிபோட்டு கஞ்சி காய்ச்சுவதற்குள், அவருக்குப் போதும் போதுமென்றாகி விடும்.
அப்படித்தான் இன்றும் விறகு அடுப்போடு அல்லாடிக் கொண்டிருந்தார்.
அவரது மனைவி அஞ்சலை இருந்த வரைக்கும், அவரது அதிகாரம் தூள் பறந்துக் கொண்டிருந்தது. காலையில் எழுந்து ஏர் கலப்பையைத் தோளில் தூக்கி வைத்து, இரண்டு செவலைக் காளைகளையும் கையில் பிடித்து, வயலுக்குச் சென்றாரேயானால், ஊரேப் பார்த்து பிரமிக்கும்.
தோளில் கலப்பை இருந்தும் “வேக்கு வேக்கு” என்று அப்படி ஒருநடை; ஒரு மிடுக்கு. “இந்த வயசிலும் இந்தக் கிழவன் எப்படி பண்ணையம் பார்க்கிறார், பாத்திங்களா!” என்று ஊர் சனங்க அதிசயப்பட்டுப் போவார்கள்.
எட்டு எட்டரை மணிக்குள் வயலுக்கு சோறு வந்தாகனும். இல்லையென்றால் அவரது மனைவி அஞ்சலைக்கு அப்படியொரு பாட்டு விழும்.
“மனுஷன் இந்த வெயிலுல எப்படி மாட்டோடு மாடா மல்லாடுறான். நேரத்தோட கஞ்சியோ, கூழோ கொண்டு வராம, ஏன்டி இவ்வளவு நேரம்?” என்று கடிந்துக்கொள்வார்.
அப்படிப்பட்ட மனுஷன்… இன்று அரை வயிற்று கஞ்சிக்காக, எரியாத அடுப்போடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்.
பொன்னுசாமி கிழவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள். மகன் படித்து முடித்து ஒரு அரசாங்க வேலையில் இருக்கிறான். மகள்களுக்கு திருமணம் முடிந்து, அவரவர் ஊர்களில் குழந்தைக் குட்டிகளோடு குடித்தனம் நடத்துகிறார்கள்.
ஒருவழியாக அடுப்பைப் பற்ற வைத்து, உலை கொதிக்க ஆரம்பித்தது. கிழவர் அரை ஆழாக்கு அரிசி எடுத்துக் கழுவி உலையில் போட்டுக் கொண்டிருந்தார்.
“ஏந்தாத்தா.. பட்டணத்திலிருக்கிற ஓன் மவன் வீட்டுல போயி, ராசாவாட்டம் ஒக்காந்துக்கிட்டு சோறு திங்கறத வுட்டுட்டு… இப்படி வெறகு அடுப்புல, கண்ணுத் தெரியாத வயசுல, புகையில வெந்து சாவற. ஏன் ஓமவன் சோறு போட மாட்டேங்கறானா?” என்று அந்த வழியாக களையெடுக்கச் சென்ற ராசாத்திக் கேட்டாள்.
“அட இல்லப்புள்ள, என்னாலதான் அங்க, அவன் வூட்டுல ஒரே இடத்தில ஒக்காந்துக்கிட்டு இருக்க முடியல” என்றவருக்கு, கடந்தக் கால நினைவுகள் காட்சிகளாக விரிந்தன.
தனது மனைவி அஞ்சலையின் கருமகாரியம் முடிந்த மறுநாள், மூன்று மகள்களும் “இதுவரையிலும்தான் அம்மா இருந்தாங்க; ஆக்கிப் போட்டாங்க; இனிமே நீ என்ன செய்வ? எங்க வீட்டுக்கு வந்துரு. நாங்க காலமெல்லாம் கஞ்சி ஊத்தறோம்” என்று தங்கள் வீட்டிற்கு அவரை அழைத்தனர்.
“என்னயிருந்தாலும் பொண்ணு கொடுத்த சம்மந்தி வூட்டுல போய் நான் உக்காந்து சாப்பிடறதா” என்று எந்த வீட்டிற்கும் போகாமல் பட்டணத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்குப் போனார்.
அங்கு ஒருவார காலம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல்தான் போய்க்கொண்டிருந்தது. வேளா வேளைக்கு நல்ல சாப்பாடு. டி.வி, மெத்தை, ஃபேன் காத்து, என்று சௌகரியமாகத்தான் நாட்கள் கடந்தன.
பேரப்பிள்ளைகளோடு பேசிக் கொண்டிருப்பதும், வேளா வேளைக்கு சாப்பிடுவதும்தான் அவருக்கு வேலை. ஆனால் ஒரே இடத்தில் அவரால் உட்கார்ந்து இருக்க முடியவில்லை. மகனும், மருமகளும் வேலைக்குப் போய் விடுவார்கள். பேரக் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று விடுவார்கள். காலை பத்து மணிக்கு மேல் தனியாக விடப்பட்ட பொன்னுசாமி கிழவருக்கு, என்னதான் வகைவகையாக சாப்பிட்டாலும், டி.வி. பார்த்தாலும், போரடிக்க ஆரம்பித்தது. எவ்வளவு நேரம்தான் ஒரே இடத்தில் உட்கார்ந்து அந்த டி.வி.யை பார்த்துக் கொண்டிருக்க முடியும்?.
அந்த கிராமத்தில் வீடு வீடாகச் சென்று திண்ணையில் உட்கார்ந்து ஊர்கதை, உலகத்துக் கதைகளையெல்லாம் ஒவ்வொருவரிடமும் பேசிப் பொழுதை கழித்தவருக்கு, ஒரே இடத்தில் கட்டிப்போட்ட மாதிரி உட்கார்ந்திருக்க முடியவில்லை.
ஒருவாரம், பத்துநாள் ஆச்சு. அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
“என் பெரிய பொண்ண பாக்கனும், என் சின்னபொண்ணு கரும காரியத்துக்கு வந்தபோதே உடம்பு சரியில்லாம இருந்திச்சி, அதப் பாக்கனும்; மக வூட்டு பேரப்புள்ளைங்க கண்ணுக்குள்ளேயே மின்னுதுங்க, என்ன பஸ்சு ஏத்திவுடு; நான் போய் சேர்ந்திடுறேன்.” என்று மகனிடம் அரிக்க ஆரம்பித்தார்.
“அப்பா! இங்க உனக்கு என்ன குறைச்சல்?, வேளா வேளைக்கு நல்ல சாப்பாடு; டி.வி. பாக்கலாம்; பேரப்புள்ளைங்களோடு பேசி சிரிக்கலாம்; அங்க போனீங்கன்னா ஒவ்வொரு வேள கஞ்சிக்கும் கஷ்டப்படுவ, வேணாம்பா!. இங்கேயே இரு!” என்று அவர் மகன் தன்ராசு எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்காமல், மறுநாளே பஸ் ஏத்திவிடச் சொல்லி ஊருக்கு வந்து சேர்ந்தார்.
“தான் பெற்ற மகனும், மகள்களும் உள்ளூரில் ஒருவர் கூட இல்லாதது அவருக்குப் பெரும் மனக்குறையாகவே இருந்தது. ஆயிரம் உறவுகள் இருந்தும், கடைசிக் காலத்தில் ஆபத்துக்கு உதவ ஒருவர்கூட பக்கத்தில் இல்லையே!” என்று வேதனைப்பட்டார். அதன்பிறகு, வேறு வழியில்லாமல் பொண்ணுங்க வீட்டுக்குப் போவதும், வருவதுமாகவே அவரது காலம் ஓடிக் கொண்டிருந்தது.
இவர் இப்படியிருக்க… தன் வீட்டில் தங்காமல் பொண்ணுங்க வீட்டில் தான் சோற்றுக்காக போயி நிற்பதை எண்ணி, தன் மகன் தன்ராசு ஒருநாள் கலங்கியதை எண்ணி மனம் வெதும்பினார்.
அந்த வேளையில் அடுப்பு நன்றாக எரிந்துக் கொண்டிருந்தது. உலையில் போட்ட அரிசி வெந்து, பொங்கி வரும்போது, மேலே மூடியிருந்த தட்டு, “தடதட” வென்று போட்ட சத்தம் கேட்டு, பொன்னுசாமி கிழவர் தன் நினைவுக்கு வந்தார்.
மேல்தட்டை எடுத்து சோறு வெந்துவிட்டதா என்று ஒரு கரண்டியால் கொஞ்சம் எடுத்து நசுக்கிப் பார்த்தார். அரை அரிசியாக இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் வேகட்டுமென்று எரிந்துக் கொண்டு வெளியில் வந்த சுள்ளிகளை அடுப்பின் உள்ளே தள்ளி விட்டார்.
“ஏன் தாத்தா! எத்தினி நாளா நீ சமைச்சி சாப்பிடுற” ஓம் பொண்ணுங்க வீட்டுக்கு போகலையா, நேத்து காலையிலதான் நீ சமைக்கிறத நான் பாத்தேன். இன்னிக்கு எங்க வூட்டுல கறிக் கொழம்பு, அதான் ஒனக்கு கொஞ்சம் கொடுக்கலாமேன்னு கொண்டுக்கிட்டு வந்தேன்” என்று ஒரு கிண்ணத்தில் தான் கொண்டு வந்த கறிக் கொழம்பை அவரிடம் கொடுத்தாள் வள்ளி.
“அப்படியா, நல்லதும்மா. நீயெல்லாம் கொழந்தையா இருந்தப்போ, எங்க வூட்டுலேயேதான் கெடப்ப, என்ன தவிக்கவுட்டுட்டு போய் சேர்ந்தாளே அந்த மகராசி, ஒன்ன வூட்டி வூட்டி வளர்த்தா, அதெல்லாம் ஒனக்கு நெனப்பு இருக்கோ, இல்லியோ!”
“ஏன் எனக்கு நல்லா நெனவிருக்குத் தாத்தா. ஒரு பொங்கலுக்கு எனக்கு பாவாடை சட்டை எடுத்துக் கொடுத்து, பத்து ரூபா பணமும் கொடுத்தீங்களே, அதெல்லாம் என்னால மறக்க முடியாது”.
“அட! இங்கப் பாருடா! இதெல்லாமா இன்னும் நீ நெனப்புல வச்சிருக்க?” என்று ஆச்சரியப்பட்டு பார்த்தார். ஆமாம் தாத்தா, அதிருக்கட்டும், “எங்கப்பா இந்த வயசுல தனியா கஞ்சி காச்சிக் குடிக்கிறது கஷ்டம், எங்க வூட்டுல வந்து இருன்னாலும் இருக்க மாட்டேங்குறாரு… நீ அவருக்கு வேளா வேளைக்கு கொஞ்சம் சோறு போடு; நான் மாசாமாசம் பணமோ, இல்ல மாசம் ரெண்டு மூட்ட நெல்லோ தந்துடறேன்னு” அந்த கொடுக்காபுளி சம்சாரம் செம்பகத்துக்கிட்ட சொல்லி ஓமவன் ஏற்பாடு செஞ்சாறாம்; அவுங்களும் சரின்னு ஒத்துகிட்டாங்களாம்; ஆனா, நீதான் அங்க போக மாட்டேங்கிறியாமே!, அப்படியா?” என்று வள்ளி கேட்டாள்.
“ஏம்மவன் சொன்னதெல்லாம் சரிதாம்மா; என்னாலதான் அங்கப் போவ முடியல; ஒருத்தர் வூட்டு வாசல்ல போயி சோத்துக்காக நிக்கிறது, எனக்கென்னமோ சரியா படலம்மா. ஒருவேள போல ஒரு வேள இருக்காது. நான் போயி சோத்துக்காக அங்க நிப்பேன்; இல்ல அந்த வூட்டு திண்ணையில ஒக்காந்திருப்பேன். உடனே அந்தப் புள்ள சோத்த எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தாதான் போச்சி. கொஞ்சம் நேரம் ஆயிடுதுன்னு வச்சிக்கோ, அதுக்குப் பல வேலையிருக்கும். ஆனா, நாம சோத்துக்காக வந்து ஒக்காந்திருக்கிறோம்… அவப்பாட்டுக்கு நம்மள கவனிக்காம அவ வேலைய பாத்துக்கிட்டிருக்காலேன்னு ஏமனசு நெனைக்கும்”.
“நம்ம வூட்டுலன்னா, கூழோ, கஞ்சியோ, இருக்குதோ, இல்லையோ, மனசு ஒத்துக்கும். ஆனா, ஒருத்தர் வூட்டுல நாம சாப்பிடும்போது அவுங்க என்ன சமைச்சாங்களோ!, ஏது சமைச்சாங்களோ! நமக்கு இததானே போடுறாங்கன்னு மனசு சஞ்சலப்படும். அதுக்காகத்தான் நான் அந்த தொந்தரவே வேணாம்னு, நம்மால முடிஞ்ச வரைக்கும் கஞ்சி காய்ச்சி குடிப்போம்னு குடிச்சிக்கிட்டிருக்கேன். எம் பொண்ணுங்க வீட்டுக்கு போனாலும்கூட விருந்தோ, மருந்தோ மூணு நாளைக்கு, நாலாவது நாள் ஓடி வந்துருவேன்” என்றார் பொன்னுசாமி கிழவர்.
“நீ சொல்றதும் சரிதான் தாத்தா. ஆனா இந்த வயசுல நீ இப்படி கஷ்டப்படறத பாக்க பாவமாயிருக்கே” என்ற வள்ளி, அடுப்பில் வெந்துக் கொண்டிருந்த சோறு வெந்து விட்டதா என்று பார்த்து, இறக்கி, வடித்து விட்டு, “கொஞ்ச நேரம் கழித்து எடுத்துப் போட்டு இந்த கொழம்ப ஊத்தி சாப்பிடு, நான் களைவெட்ட போவனும்” என்று கூறி கிளம்பினாள்.
அவள் போன பிறகு பொன்னுசாமி கிழவர் தான் சாப்பிடும் தட்டு, தண்ணீர் குடிக்கும் சொம்பு ஆகியவைகளைக் கழுவி, வீட்டிற்குள் எடுத்துச் சென்று வைத்தார். வள்ளி வடித்து விட்டிருந்த சோத்துப் பானையை ஒரு துணி பிடித்து இறக்கி, வடித்து விட்டிருந்த கஞ்சி மதியத்துக்கு ஆகுமென்று நினைத்து அதையும், சோத்து பானையையும் வீட்டிற்குள் எடுத்துச் சென்றார். அடுப்பை தண்ணி ஊத்தி அணைத்துவிட்டு, முகம் கழுவி ஒரு துண்டால் துடைத்துக்கொண்டே வீட்டிற்குள் சென்று சாப்பிட உட்கார்ந்தார். வள்ளி கொடுத்த கறிக்குழம்பு வாசனை அவர் மூக்கை துளைத்தது.
“அடடா! எத்தன நாளாச்சி. இப்பேற்பட்ட கறிக்குழம்புலாம் சாப்பிட்டு. நான் தாலிக்கட்டிய மகராசி இருந்திருந்தால், என் நிலம இப்படியாயிருக்கும்?”
“என்னை எப்படி எப்படியெல்லாம் கவனிச்சா. நான் பசி பொறுக்க மாட்டேன்னு, காலையில எட்டு மணிக்கெல்லாம் சோத்தை தூக்கிட்டு வயலுக்கு ஓடி வந்துடுவாளே!, கொஞ்சம் நேரமானாலும் அப்படி திட்டுவேனே!, ஒரு வார்த்தைக்கூட எதிர்த்து பேசமாட்டாளே! ஆனா இப்போ…. ஏன்னு கேக்குறதுக்கு நாதியில்லையே! ஏறெடுத்து பார்ப்பதற்கும் ஆளில்லையே!.
“காலையில எழுந்திரிச்சி இந்தக் கஞ்சிய காய்ச்சி முடிக்கிறதுக்கு பத்துமணியாச்சி. கஞ்சி காய்ச்ச மலைச்சி பட்டினி கிடந்த நாளு ஏராளம்! ஒரு வேள சமச்சி மூணு வேள சாப்பிட்ட நாளு கணக்கில்ல”.
“அஞ்சல! நீ சமைச்சி நல்லாயில்லன்னா தூக்கி ஓம் மூஞ்சில எறிவேனே!. இப்போ மூணு நாளு ரசத்தக்கூட முகம் சுளிக்காம, ஊத்தி திங்கிறேனே!, என் நெலமையை பாத்தியா?”
“நீ சொல்லுவியே, நான் பூவோடும் பொட்டோடும் ஒங்களுக்கு முன்னாடியே போய் சேரனுன்னு” “ஓன் நல்லநேரம் நீ சொன்னபடியே போய் சேந்துட்ட!. ஆனா என் தலைவிதி, இத்தனை சாதி சனங்க இருந்தும் அனாதையா நிக்கிறனே!, என் நெலம எந்த ஆம்பளைக்கும் வரக்கூடாது! என்னால தாங்க முடியலடி, என்ன உன்னோட அழைச்சிக்கோயேன்” என்று கலங்கினார். கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.
அவர் ஆக்கிய சோறு, வள்ளி கொண்டுவந்துக் கொடுத்த கறிக்கொழம்பு, கழுவி வைத்த தட்டு, சொம்பு அனைத்தும் தொடுவதற்கு ஆளில்லாமல் சோகத்தை வெளிப்படுத்தின.
“அஞ்சலை… மனித வாழ்க்கையில புருஷன் செத்து, பொண்டாட்டி இருக்கலாம். அவ எப்படியாச்சும் சமாளிச்சுக்குவா. ஆனா, பொண்டாட்டி செத்து புருஷன் இருக்கான்பாரு… அவன் வாழ்க்கை நரகத்திற்கு சமம். ஒவ்வொரு வூட்டிலும் சோத்துக்காக, அது பெத்த புள்ளைங்க வூடா இருந்தாலும், காத்துக் கெடக்கிறது கொடுமையிலும் கொடுமை. நீ பூவோடும் பொட்டோடும் போய் சேர்ந்துட்ட. என் வாயும் வயிறும் காயிதே பாத்தியா?” என்று கலங்கி அந்தச் சாப்பாட்டைக் கூட சாப்பிடாமல் தள்ளி வைத்துவிட்டு, கட்டிலில் போய் சாய்ந்தார் பொன்னுசாமி கிழவர்.
– கதைப் படிக்கலாம் – 73
இதையும் படியுங்கள் : குழந்தை பாக்கியம்




