– தனசேகர்
பரபரப்புக்குப் பெயர் போன சென்னை மாநகரம்.
அந்த திங்கட்கிழமையின் காலை நேரம் சரியாய் மணி எட்டு முப்பது. மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அவ்வப்போது வந்து செல்லும் பேருந்துகளில் ஏறுவதும், இறங்குவதுமாய் மக்கள் தலைகள் அகப்பட்டுக் கொண்டிருந்தன.
‘நாம எதிர்பார்க்கிற பேருந்து மட்டும் வராது…’
சற்று சலிப்போடு நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, எல்லாருக்குமே இதே சலிப்புதானே ஏற்பட்டிருக்கும்? என்ற கேள்வியும் எழுந்து அடங்கியது.
‘இன்று காலை சரியாய் பத்து மணிக்கு ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங்… அதுக்காகவே இன்றைக்கு சரியான நேரத்துக்குப் போய் ஆக வேண்டும். தவறினால் அந்த டீம் லீடரின் நாகரீகமான அர்ச்சனையை இலவசமாக பெற நேரிடும். அதுமட்டுமல்ல, அவரிடம் நம் மீதான நன்மதிப்பை இழந்தால் அது நம் வளர்ச்சிக்கு… அதாவது பதவி உயர்வுக்கு சிரமமாக அமைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது…’
எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் போதே, பக்கவாட்டில் சாலையோரம் ஒருவர் நடந்து வந்துக் கொண்டிருந்தார்.
எதேச்சையாக எனது பார்வை அவர்மீது விழ, புருவம் சுருங்கியது.
‘யார் இவர்…?’
சிறுமூளை சட்டென அடையாளம் கண்டுகொண்டது.
‘அட… இவர்தானா…?’
நான் இதற்கு முன்பு வேலை பார்த்த ஆஃபீசில் என்னுடன் பணியாற்றியவர். என்னுடைய பக்கத்து சீட்டுக்காரர்.
தற்போது நான் இருக்கும் திசையை நோக்கித்தான் நடந்து வருகிறார். கையில் லஞ்ச் பேக் எடுத்து வருகிறார். பத்து வருடத்திற்கு முன்பு பார்த்தது. இப்போது சற்று இளைத்தது மாதிரி தெரிகிறது.
‘இந்த பக்கம் எதற்கு வருகிறார்…? சரி வரட்டும், அவரிடம் சில நிமிடங்களாவது பேசவேண்டும்’
பேருந்தின் மீதான எதிர்பார்ப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு அவர் வருகைக்கு ஆர்வமானேன். வேகவேகமாய் வந்து கொண்டிருந்தார் அவர். பத்து ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை நோக்கி எனது சிந்தனை தாவியது.
‘அப்போது 2020 ஆம் ஆண்டு. நான் அந்தக் கம்பெனியை விட்டு விலகலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்… கொரோனா என்னும் கொடிய அரக்கன் வந்து, இப்போது வேலையை விட்டு நின்றால் வேறு வேலைக்கு யாரும் உன்னை அழைக்கப் போவதில்லை என எச்சரித்து, என்னை இன்னும் சில வருடங்களுக்கு அங்கேயே வேலை பார்க்க வைத்துவிட்டான். அப்போது நானும் எனது பக்கத்து சீட்டுக்காரரும், அதான் அதோ வருகிறாரே அவர்தான், அவரும்… அலசி ஆராயாத தலைப்புகளே இல்லை.
வேலைக்கு இடையிலான இடைவெளியில் தொடங்கி, டீ குடிக்கிற நேரம், உணவு இடைவேளை மட்டுமல்ல… விடுமுறை நாட்களிலும்கூட ஃபோனில் விவாதிப்போமே… அட… அது ஒரு காலம்…
வூஹான் நகரில் தொடங்கி, உளுந்தூர்பேட்டை வரை…
கோயம்பேடு சந்தையில் தொடங்கி, குமரிக் கடலின் கொந்தளிப்பு வரை…
ரஃபேல் ஒப்பந்தத்தில் தொடங்கி, பாரத் நெட் வரை…
தூத்துக்குடி தொடங்கி, சாத்தான்குளம் வரை…
ஹைட்ராக்சி குளோரோ குயின் தொடங்கி, கோவேக்சின் வரை…
புதிய கல்விக் கொள்கை தொடங்கி, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை வரை…
சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடங்கி, சாட்விக் போஸ்மேன் வரை…
டோனால்டு ட்ரம்ப் தொடங்கி, ஜோ ஃபிடேன் வரை…
அப்போதைய பரபரப்பு சம்பவங்கள் இன்னும் என் நினைவில் நிற்கிறது. அந்த அளவிற்கு ஆக்கப்பூர்வ விவாதம் அது…’
கிட்டத்தட்ட அவர் என்னை நெருங்கிய சமயத்தில் நான் எதிர்பார்த்திருந்த பேருந்து வந்து நின்றது. அலுவலக மீட்டிங் ஒருபுறம் நினைவுக்கு வந்தது.
‘போகட்டும்… அவரிடம் பேசிவிட்டுத்தான் செல்ல வேண்டும். லேட் ஆனா பரவாயில்லை. என்னதான் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்ல கனெக்ட் ஆகி இருந்தாலும் நேர்ல பேசுற மாதிரி வருமா…?’
மிக அருகில் வந்தவரை நோக்கி நான் கை உயர்த்தி சைகை செய்ய, அடையாளம் கண்டவராய் அவரும் கையை உயர்த்தினார்.
அருகில் வந்தவரிடம் மிக ஆவலாக ‘என்னங்க… எப்படி இருக்கீங்க…?’ என ஆரம்பித்த நான், ‘என்ன இந்தப் பக்கம்…?’ என வாயெடுத்து ஏமாந்து போனதுதான் மிச்சம்.
“நான் வொர்க் பண்ற புது ஆஃபீஸ் இங்க பக்கத்துலதான் இருக்கு, ஆப்போசிட்ல… ரோட கிராஸ் பண்ணனும், எனக்கு லேட் ஆயிடுச்சு… த்ரீ மினிட்ஸ் லேட் ஆனா, ஆப்டே சேலரி கட்… சோ, பேச நேரமில்லை ஈவ்னிங் போன்ல கூப்பிடறேன்…”
சொல்லிவிட்டு எனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சாலையைக் கடக்கும் முனைப்பில், ஓட்டமும் நடையுமாய் என்னைக் கடந்து போனார் அவர்.
***************
‘என்ன இப்படி மாறிட்டார் இவர்…? இத்தனை வருஷம் கழிச்சு பார்க்கிறோம்… எப்படி இருக்கே-னு கூட ஒரு வார்த்தை கேட்கல… மனிதர்கள் பலவிதம்ங்கிறது இதுதான் போல… இதைப்பத்தி கூட நாம நம்ம விவாதத்துல பேசியிருக்கோமேய்யா…’
எத்தனையோ பேருந்துகள் வந்துவிட்டுப் போனதன் விளைவு… இப்போது எனக்குப் பக்கத்தில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் எல்லாம் புது முகங்களாக தெரிந்தார்கள்… நேரம் சரியாய் மணி ஒன்பது முப்பது. ‘இப்போது பேருந்து வந்தால் கூட சரியாய் பத்து முப்பது ஆகும், நான் அலுவலகம் போய் சேருவதற்கு. அப்போது மீட்டிங் முடிஞ்சு, எல்லோரும் அவங்க அவங்க சீட்டுக்கு வந்திருப்பாங்க’
ஏமாற்றமும், வேதனையுமாக நான் மீண்டும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன். அந்த நிமிடம் முடிவதற்குள் திடீரென ஒரு பரபரப்பு…
சாலையின் இருபுறமும் வாகனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு பயங்கர டிராஃபிக்…
கிட்டத்தட்ட அனைத்து வாகனங்களின் வேகமும் குறைந்து நின்றுவிட்டன.
பேச்சுக்குரல்கள் காதுகளில் விழ ஆரம்பித்தன. எனக்குப் பின்பக்கமாய் கை காண்பித்தபடி ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘அதோ அங்கே ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுப்பா… யாரோ ரோட கிராஸ் பண்ணும்போது தண்ணி லாரியில அடிபட்டு…’
எனக்குத் திடீரென என் நண்பரின் ஞாபகம் வந்தது.
‘ந்நோஓஓ… அவராய் இருக்கக் கூடாது…’
பதறியபடி ஓடினேன். இதயம் தாறுமாறாய் அடித்துக் கொண்டது.
கூடியிருந்த கூட்டத்தை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன். இருதயப் பிரதேசம் நிலநடுக்க அதிர்ச்சிக்குப் போனது. தூக்கி வீசப்பட்ட லஞ்ச் பேக்கில் இருந்து சோற்றுப் பருக்கைகள் சாலையில் சிதறிக் கிடந்தது தெரிந்தது. அவரேதான்.
உடம்பின் பல இடங்களில் காயம். தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றால்தான் காப்பாற்ற முடியும்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மிருகக்காட்சி சாலையில்; மிருகங்களை மனிதர்கள் வேடிக்கை பார்ப்பதுபோல, இதுபோன்ற விபத்துகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் வழக்கம்போல் இப்போதும் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க,
‘ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணுங்க…’ என்றார் யாரோ ஒருவர்.
அதை அவர் செய்தால் தூக்கு தண்டனை கொடுத்துவிடுவார்கள் போல… என நினைத்துக் கொண்டே ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்ய முயன்றபோது, சைரன் ஒலியோடு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாய் வந்து நின்றது.
யாரோ ஒரு நல்லவர் ஃபோன் செய்திருப்பார் போல…
மருத்துவமனையில் அன்றைய நாள் முழுவதும் அவருடன் இருந்து, கவனித்துவிட்டு, அவர் வீட்டுக்குத் தகவல் சொல்லிவிட்டு, இரவு ஏழு மணிக்கு புறப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
‘சிக்னலுக்கு கட்டுப்பட்டு நிற்காமல் சென்று விபத்தை ஏற்படுத்திய அந்த தண்ணீர் லாரியின் டிரைவர், கைது செய்யப்பட்டார்;’ என்கிற கூடுதல் தகவலோடு, நண்பரின் விபத்துச் செய்தியை அன்றைய இரவு வரை செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
ஃபோனில் அவ்வப்போது நண்பரின் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தேன். சரியாய் இரண்டு வாரம் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், அவரிடம் இருந்து எனக்கு ஃபோன், ‘சந்திக்க வேண்டும்’ என்று.
வீட்டு முகவரியை சொன்னேன்.
அவரும், அவரது மனைவியும் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.
“வாங்க… இப்போ எப்படி இருக்கு…?” எனக் கேட்டுக்கொண்டே நான் எதிர்கொண்டேன்.
“இப்போ பரவாயில்லை…” என அவர் மனைவி சொல்ல… என் கைகளைப் பற்றிக்கொண்டார் அவர்.
பார்வையால் மன்னிப்பு கேட்பது தெரிந்தது.
“வாங்க வீட்டுக்குள்ளே போய் பேசலாம்…” என அழைத்துச் சென்றேன்.
“அன்றைக்கு உங்களிடம் சில நிமிட நேரத்தை ஒதுக்கி பேசிவிட்டுப் போயிருந்தால், அந்தத் தண்ணீர் லாரியிடம் அடிபடாமல் தப்பியிருக்கலாம்…” என ஆரம்பித்தவர்,
“அலுவலகம்… வேலை… சம்பளம்… என இயந்திரத்தனமாய் மாறிப் போனதன் விளைவு…” என விவாதத்தை ஆரம்பித்தார்.
“அப்படி ஏன் நினைக்கிறீர்கள்…? இப்படி யோசித்துப் பாருங்கள்… அன்றைக்கு நீங்கள் என்னை சந்திக்காமல் இருந்திருந்தால், உங்கள் நடையின் வேகம் குறையாமல் சற்று முன்பாகவே அந்தத் தண்ணீர் லாரியைக் கடந்துப் போயிருக்கலாமே… ஒரு விதத்தில் நானும் அந்த சம்பவத்துக்கு ஒரு காரணம்தான்…” என பதிலுக்கு வாதிட்ட நான்,
“இயந்திரத்தனமான இந்த உலகில் நாம் ஒன்றும் ரோபோக்கள் அல்ல… மனிதர்கள்தான் என்பதை மறந்துப்போனதன் விளைவு…” என ஆர்வமாய் தொடங்கினேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்கள் விவாதம் பழையபடி ஆரோக்கியத்துடன் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
– கதைப் படிக்கலாம் – 155