– இராம. பாலஜோதி

‘சுபாஷினி ஏழாவது மாடியிலிருந்து தவறிவிழுந்து இறந்துட்டா மேடம். எல்லா நியூஸ் சேனல்லையும் இன்னிக்கு அவதான் டாபிக்’. அமிர்தா எனக்கு அனுப்பியிருந்த வாட்ஸ் அப் தகவலைப் படித்ததும், என் உடல் நடுங்கியது. “அய்யோ…. சுபா” என்று வாய் விட்டுக் கதறினேன். ‘மழுக்’ என்று கண்களில் கண்ணீர் தழும்பியது.
கன நேரத்துக்குள் மின்னல் வெட்டுகளாக, சுபா பற்றிய பல்வேறு சிந்தனைகளும், கேள்விகளும் மூளைக்குள் தோன்றி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘தவறி விழும் அளவுக்கு சுபா கவனக் குறைவானவள் இல்லையே?’….. ‘அவளது அலுவலகம் இருப்பது மூன்றாவது தளத்தில்….. அவள் ஏன் ஏழாவது மாடிக்குப் போனாள்?’…. என்றெல்லாம் யோசித்தபடியே, டி.வி.-யை ஆன் செய்து, பிரதான செய்திச் சேனலுக்குத் தாவினேன்.
சுபா பற்றிய செய்திதான், பரபரப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் சேனலில் வேலை பார்க்கும் என் மகன் கார்த்திதான், அந்தச் செய்தியை நெறிப்படுத்திக் கொண்டிருந்தான். சுபாவின் இறப்பு அவனை வெகுவாக பாதித்திருப்பதை, அவனது வாட்டமான முகமும், சோகமானக் குரலும் வெளிப்படுத்தியது. ‘கார்த்தி அண்ணா’ என்று வாஞ்சையோடும், பாசமுடனும், உரிமையாகவும் அவனை அழைப்பாள், சுபா.
அந்தச் சேனலில் சுபாவின் சடலத்தைக் காட்டும் போதெல்லாம், என்னால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. சுபா அலங்கோலமாகக் கிடந்தாள். அவளைச் சுற்றி ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களும், இளைஞர்களும் நின்றிருந்தார்கள். அவளுடன் பணிபுரியும் சில பெண்கள், கதறி அழுதுக் கொண்டிருந்தார்கள். போலீஸார், அந்தப் பெண்களின் அழுகையையும், கூட்டத்தையும், அதிகாரக்குரலில் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
சுபா வேலை பார்க்கும், பிரபலமான மென்பொருள் அலுவலகத்தின் பிரமாண்ட கட்டிடத்தையும் கட்டினார்கள். ‘சுபா மரணம் – தற்செயலா? தற்கொலையா?’…. என்று டி.வி.-யின் கீழே, ஸ்க்ரோலிங் ஓடியது. அதைப் படித்ததுமே, எனக்கு கோகுல் சட்டென்று நினைவுக்கு வந்தான். ‘அவனும் இந்தச் செய்தியை நெறிபடுத்திக் கொண்டிருப்பானே?’ என்ற சிந்தனை வந்தவுடன், கோகுல் வேலைப் பார்க்கும் சேனலைத் திருப்பினேன்.
நான் நினைத்ததுப் போலவே, அவன்தான் அந்தச் செய்தியை வழங்கிக் கொண்டிருந்தான், முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல்…. சுபாவின் இறப்பு அவனை கொஞ்சங்கூட பாதிக்கவில்லை என்பதான முகபாவணையில் இருந்தான். ‘ஒருவேளை, சுபாவின் இறப்புக்கு இவன்தான் காரணமாக இருப்பானோ?…. சுபா, ஜெகதீஸை காதலிப்பது பிடிக்காமல், அவளை டார்ச்சர் செய்து, தற்கொலைக்குத் தூண்டியிருப்பானோ?’ என்றெல்லாம் சிந்தனைகள் எனக்குள் தாறுமாறாகக் கிளம்பியது. அவளது அகால இறப்பை, என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
டி.வி.-யை ஆன் செய்ததிலிருந்து, அந்த இரண்டு நியூஸ் சேனல்களையும் மாற்றி, மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்ததில், நேரம் போனதே தெரியவில்லை. காலை டிபன் தயார் செய்யவில்லை. சுகர், பிரஸர் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நினைப்பே வரவில்லை. என் உடல் உபாதைகளையும் தாண்டி, சுபாவின் நினைவுகள் என்னை ஆக்கிரமித்தது.
சுபா அறிவும், அழகும், துடிப்பும், தாழ்மையும் கொண்ட, எவரையும் எளிதில் வசீகரித்துவிடும் பெண். அவள் முகத்தில் எப்போதும் ஒரு ஒளி மிளிரும். ஆங்கிலத்தில் பேசுவதிலும், எழுதுவதிலும் தனி பாணி அவளுக்கு. அவள் இருந்தாலே கல்லூரியே கலகலப்பாக இருக்கும். நான் எப்போது வகுப்பறையில் நுழைந்தாலும், என் கண்கள் முதலில் அவளைத்தான் தேடும். அவளுக்கு ஆங்கில பேராசிரியராக இருப்பதே எனக்குப் பெருமை போல தோன்றும். “சுபா ஒருத்திக்கு மட்டும் நீங்கள் வகுப்பு எடுங்கள் மகாலெட்சுமி”, என்று கல்லூரி நிர்வாகம் எனக்கு உத்தரவிட்டால் கூட, அதை செய்வதற்கு தயாராக இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் நானே உணர்ந்திருக்கிறேன்.
வகுப்பில் யாருக்கும் தோன்றாத பாடம் குறித்த சந்தேகங்களைக் கேட்பாள். சமயத்தில் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டுத் திணறடிப்பாள். ‘கற்றவரைக் கற்றோரே காமுறுவர்’ என்ற தமிழ் நீதிக்கு நான் மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியுமா? எனவே, அவளை மனதளவில் மட்டுமல்ல, செயல் அளவிலும் எனது மகளாக சுவீகரித்துக் கொண்டேன். எப்போது வேண்டுமானாலும், என் வீடுவரை வந்து செல்லும் உரிமையையும், அளவில்லாத அன்பையும் சுபாவுக்கு கொடுத்தவளாக இருந்தேன்.
இவற்றை ஒரு காரணாமாகக் கொண்டு, அவள் எப்போதும் எல்லை மீறிய உரிமையை என்னிடத்தில் எடுத்துக் கொண்டதில்லை. தனது ‘ஆசான்’ என்ற மரியாதையை எப்போதும் என் மீது வைத்திருந்தாள். கல்லூரியில் ‘மேடம்’ என்றும் வீட்டுக்கு வந்தால், ‘அம்மா’ என்றும் அழைப்பாள். என் ஒரே மகன் கார்த்தியும், அவளை தனது சொந்தத் தங்கையாக பாவித்தான். பாசம் செலுத்தினான்.
எனக்கு உடல்நலக்குறைவு, பீரியட் நேரங்களில் எனக்கு ஒத்தாசையாக, எனது வீட்டிலேயே தங்கி, என்னை அக்கறையும், அன்புமாக கவனித்துக்கொள்வாள். சென்னையில் தங்கி, பிரதான செய்தி சேனலில் வேலைப் பார்த்துக் கொண்டு, வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே பாண்டிச்சேரிக்கு வந்து என்னைப் பார்த்து செல்லும் கார்த்தி கூட, சுபா இருக்கும் தைரியத்தில், மாதத்துக்கு ஒரு முறை வந்து போக ஆரம்பித்தான். அதேபோல், சென்னையில் இருந்து மகளைப் பார்ப்பதற்காக, வார விடுமுறையில் வந்து போகும் சுபாவின் பெற்றோரும், மாதத்துக்கு ஒருமுறை வரப் போக இருந்தார்கள். எனக்கும் சுபாவுக்குமான பிணைப்பு, தாய்மையைத் தாண்டிய பேரன்பில் இணைக்கப்பட்டிருந்தது.
ஒருநாள் இரவு சப்பாத்தி திரட்டிக்கொண்டே கேட்டாள். “ஏன்… நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலே?” இதேக் கேள்வியை, கார்த்தி பிறந்த மூன்றாவது மாதத்திலிருந்தே, பலரும் பல சந்தர்ப்பங்களில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
அப்படி கேட்பவர்களுக்கு, பிரதான உண்மை ஒன்றும்… பிரதான பொய் ஒன்றுமே… என் பதிலாக இருந்திருக்கிறது. அந்த உண்மை, “கார்த்தியை நல்லபடியா வளர்த்து, பெரிய ஆளா ஆக்கணும். அதனால, இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை” என்பது தான். அந்த பிரதான பொய், “கார்த்தியின் அப்பா விபத்து ஒன்றில் அகால மரணமடைந்துவிட்டார்” என்பதே.
ஒரு உண்மையோடு, ஒரு பொய்யும் சேர்த்துச் சொன்னபோது, அப்படியே நம்பினார்கள். ஆனால், சுபாவிடம் அந்த பிரதான பொய்யை சொல்வதற்கு என் மனம் ஒப்பவில்லை. நான் மட்டுமே அறிந்த அந்த ரகசியத்தை, சில வருடங்களுக்கு முன்பு, கார்த்தியை அமர வைத்து, அவனது அப்பா பற்றிய உண்மையை கூறியதை, இப்போது சுபாவிடமும் சொல்லலாம் என்று, என் மனது ஒப்புதல் அளித்தது… அன்றைக்கு அந்தக் கசப்பான உண்மையை சுபாவிடம் சொன்னேன்.
விழுப்புரத்தில் நான் கல்லூரி முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக பாண்டிச்சேரியில் உள்ள பல்கலைகழகத்தில் சேர்ந்த இரண்டாம் வருடம், என்னைத் துரத்தித் துரத்தித் காதலித்த கண்ணனை, நானும் விரும்பிய அந்தத் தருணத்தையும், இருவரும் இணைந்து, எங்கெல்லாம் சுற்றினோம்… என்னவெல்லாம் பேசினோம்… என்பதையெல்லாம் சுபாவிடம் விவரித்தேன்.
நூறு சதவிகிதம் அவனை நான் நம்புகிறேன் என்ற நிலைவந்தபோது, அவன் என்னை கர்ப்பம் ஆக்கிவிட்டு தலைமறைவாகி விட்டதையும், நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்பதையும் சொன்னபோது, சுபா அதிர்ந்துப் போனாள். அதன்பின், பெற்றோரை எதிர்த்துக் கொண்டு, வயிற்றில் வளரும் குழந்தைக்காக, பாண்டிச்சேரியிலேயே வீடு எடுத்துத் தங்கி, தனியொரு பெண்ணாகப் போராடி, அவமானம், அவச்சொற்கள் எல்லாம் தாங்கி, கார்த்தியைப் பெற்றெடுத்து, அவனை வளர்த்துக் கொண்டே, மேற்படிப்புகள், ஆராய்ச்சிகள், ஆங்கில பேராசிரியை என்று எனது வாழ்க்கையை தகவமைத்துக் கொண்டதையும் அவளிடம் விவரித்தேன்.
அதனைக் கேட்டு சுபாவால் தாங்கமுடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள். அதன்பிறகு, என் மீதான மதிப்பு அவளிடம் கூடியிருந்ததை உணர்ந்தேன். அப்படி நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லைதான். ஆனால், தனி மனுஷியாக போராடி, எழுந்து நின்று, கார்த்தியை ஆளாக்கி, ஒரு தாயாக சின்னதாக சாதித்துவிட்டதாக சுபாவுக்குத் தோன்றி இருக்கலாம்.
பாண்டிச்சேரியில் கல்லூரி படிப்பை முடித்தக் கையோடு, சென்னையில் வசிக்கும் அவளது பெற்றோரிடம் சென்றுவிட்டாள் சுபா. சில மாதங்களிலேயே பெரிய ஐ.டி. நிறுவனத்தில், சுபாவுக்கு கைநிறைய சம்பளத்துடன், வேலையும் கிடைத்துவிட்டது. கார்த்தி வேலை பார்க்கும் நியூஸ் சேனல் அமைந்திருக்கும் சாலையிலேயே சற்று தூரத்தில், கொஞ்சம் உள்ளடங்கி அமைந்திருந்தது சுபா வேலை பார்க்கும் ஐ.டி. நிறுவனம்.
வார இறுதி நாட்களில், சுபாவின் வீட்டுக்குக் கார்த்தியும், கார்த்தி வசிக்கும் வீட்டுக்கு சுபாவும் செல்வதும், பல சந்தர்ப்பங்களில் இரவு டின்னருக்கு கார்த்தி தனது மூன்று நெருங்கிய நண்பர்களுடன் ஓட்டல்களுக்கு செல்லும் போது, சுபாவும் அந்தக் குழுவில் இருப்பது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. இதனைக் கார்த்தியும் சுபாவும் என்னோடு போனில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருமுறை, கார்த்தி பாண்டிச்சேரி வந்தபோது, “அம்மா, சுபாவுக்கு அப்பா பத்தி நீ ஏதும் சொன்னியா?” என்று என்னிடம் கேட்டான். “ஆமாடா, ஏன் கேக்குறே?” என்று நான் கேட்டேன். “என் ஃப்ரெண்டு ஜெகதீஸ் சுபாகிட்டே ஃப்ரபோஸ் பண்ணான். அவ ஏத்துக்கல. ‘வீட்டுல அம்மா-அப்பா பார்க்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். லவ்வெல்லாம் எனக்கு செட் ஆகாது’னு சொல்லிட்டா. ஜெகதீஸ் ரொம்ப அப்செட் ஆயிட்டாம்மா” என்றான்.
அதைக் கேட்டு, ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மற்றொரு பக்கம் சுபாவின் பயம் குறித்து சிரிப்பாகவும் எனக்கு இருந்தது. ஜெகதீஸ் மாதிரியான ஒரு நல்ல பையனை, சுபா எனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு நிராகரிப்பது அபத்தமாகப்பட்டது. இத்தனைக்கும் ஜெகதீஸ் சாதாரண ஆளும் கிடையாது. அவனது அப்பா வெற்றிகரமான பிஸ்னெஸ்மேன்.
அதேப்போல்தான், கார்த்தியின் மற்ற இரண்டு நண்பர்களான ஷாமும், விக்கியும். இந்த மூன்று பேரும், கார்த்தியின் கல்லூரிக் கால நண்பர்கள். அப்படியொரு நெருங்கிய நண்பர்கள் இந்த நால்வரும். அன்று இரவே சுபாவுக்கு போன் செய்து, ஜெகதீஸ் பற்றி பேசினேன். இரண்டு பேரும் திருமணம் செய்துக்கொள்வதில் உள்ள சாதகமான விஷயங்களை, அவளிடம் பட்டியலிட்டேன்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவள், மறுநாளே, ஜெகதீஸிடம் தனது காதலை சொல்லிவிட்டாள். ஜெகதீஸ்-சுபா காதல் விஷயத்தில் என்னைவிட, கார்த்திக்குக்கு அளப்பரிய சந்தோஷம். சுபாவே, தன் பெற்றோரிடமும் சொல்லிவிட்டாள். அவர்களுக்கு, ஜெகதீஸ் பற்றி நான் சர்டிபிக்கேட் கொடுத்ததால், டபுள் சந்தோஷம்.
ஆறு மாதங்கள் கழித்து, ஒரு மதிய நேரத்தில், என் வீட்டு வாசாலில், பாண்டிச்சேரி போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சுபாவும், கூடவே, வாட்டசாட்டமான ஒரு இளைஞனும் இறங்கினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கன நேரத்துக்குள், பல்வேறு சிந்தனைகள் மண்டைக்குள் தோன்றி மறைந்தது. அதனை புரிந்துக்கொண்ட சுபா, முதலில் என்னை ஆசுவாசப்படுத்திவிட்டு, அந்த இளைஞனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“இவன் கோகுல். சென்னையில் எங்க வீட்டுக்கு எதிர்வீடு, நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும் போதிருந்தே ஃப்ரெண்ட்ஸ்” என்றாள்.
“ஒகே சுபா…. ரெண்டு பேரும் போலீஸ் ஜீப்ல வந்து இறங்குறீங்க… ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டேன்.
“அய்யோ … அம்மா, பயந்துட்டீங்களா?” என்று சிரித்தப்படியே கேட்டவள். தொடர்ந்து, “நானும் கோகுலும் கம்ப்யூட்டர் ஹேக்கர்ஸ். நான் இங்கே தங்கி படிக்கும்போது, பாண்டிச்சேரி சைபர் கிரைம் போலீசுக்கு ரகசியமா உதவி பண்ணி இருக்கேன். இந்தத் தடவை, ரொம்ப சிக்கலான கேஸ். என்னால மட்டும் அதை பண்ண முடியாது. அதான், உதவிக்கு கோகுலையும் கூட்டி வந்தேன்” என்றாள்.
கோகுல் சென்னையில் மற்றொரு பிரபலமான நியூஸ் சேனலில், நியூஸ் எடிட்டராக வேலை பார்ப்பதாகச் சொன்னான். அந்தச் சேனல், கார்த்தி வேலை பார்க்கும் நியூஸ் சேனலுக்கு போட்டி நிறுவனம். இருவரும் டீ மட்டும் சாப்பிட்டு விட்டு, உடனடியாக ஜீப்பில் ஏறிப் போனார்கள்.
கோகுல், ஜெகதீஸை விட அழகாகவும், நிறமாகவும், ஸ்டைலாகவும் இருந்தான். இரண்டு பேரும் ஜீப்பிலிருந்து இறங்கி வந்த போதும் சரி, வீட்டுக்குள் அருகருகே அமர்ந்து என்னுடன் பேசிக் கொண்டிருந்தபோதும் சரி, எனது பார்வைக்கு ‘சரியான ஜோடிப் பொருத்தம்’ என்று தான் தோன்றியது, கோகுலை விட்டுவிட்டு, நான் சொன்னேன் என்பதற்காக, ஜெகதீஸை சுபா விரும்புகிறாளா? என்று என் மனதுக்குள் சந்தேகம் துளிர்த்தது. அன்று இரவு சுபாவிடமே போன் போட்டுக் கேட்டு விட்டேன்.
“ம்மா, கோகுல் என்னோட ஃப்ரெண்ட்டுமா? அவனை என்னோட லைஃப் பார்ட்னரா நிச்சியம் ஏத்துக்க முடியாது. அதோட, நான் ஜெகதீஸை லவ் பண்றதும்…. அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேங்கிறதும் கோகுலுக்குத் தெரியும்” என்றாள். அதன்பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது.
ஆனால், இப்போது ‘சுபா இறப்புக்கு கோகுல் மறைமுகக் காரணமாக இருப்பானோ?’ என்ற சந்தேகம் முளைத்தது. சுபா, ஜெகதீஸை லவ் பண்ணுவது கோகுலுக்குப் பிடிக்கவில்லையோ… மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், கோகுலின் டார்ச்சர் தாங்க முடியாமல், சுபாவே தற்கொலை செய்துக் கொண்டிருப்பாளோ? இப்போதெல்லாம் ஹீரோ மாதிரி இருக்கிறவங்கத்தானே வில்லத்தனம் பண்றாங்க… என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, என் மொபைல் போன் அடித்தது, கார்த்திதான் பேசினான். அவன் குரல் உடைந்திருந்தது. சுபாவின் மரணத்தைப் பற்றி கூறி அழுதான். என்னாலும் தாங்க முடியவில்லை.
“இன்னைக்கு நைட் விவாத அரங்கத்துல சுபாதாம்மா டாபிக். நான்தான் ஒழுங்குப்படுத்துறேன். ‘சுபா மரணம்…. தற்செயலா? தற்கொலையா?’னு தலைப்பு… எடிட்டர் குடுத்து இருக்காரு. அதை முடிச்சுட்டு, நைட்டே புறப்பட்டு வீட்டுக்கு வர்றேம்மா. ரெண்டு நாள் லீவு சொல்லிருக்கேன். மனசே சரியில்லம்மா” என்றான்.
அடுத்தடுத்து நேரலை சார்ந்த பணிகள் காரணமாக, சுபாவின் இறுதிச் சடங்கில் கூட கலந்துக்கொள்ள முடியாத சூழலைச் சொல்லிக் கதறினான். இன்று மாலையே தகனம் செய்ய சுபாவின் பெற்றோர் முடிவு செய்திருப்பதாகச் சொன்னான். “அய்யோ, அப்போ நானும் போகமுடியாதாடா” என்று புலம்பினேன்.
கார்த்தியிடம் பேசி முடித்தப் பிறகுதான், போனில் டிஸ்ப்ளேவை கவனித்தேன். எனக்கு மெயில் வந்திருந்தது. அதை ஓப்பன் பண்ணியதுமே அதிர்ந்தேன். சுபாதான் காலை எட்டு மணிக்கு அனுப்பியிருந்தாள். இவ்வளவு நேரமாக கவனிக்காமல் இருந்து விட்டேனே… அவள் இறப்பதற்கு முன்பாக எனக்கு மெயில் அனுப்பி இருக்கிறாள். அதனை உடனடியாக கவனித்திருந்தால், ஒருவேளை அவளைக் காப்பாற்றி இருக்கலாமோ … என்ற யோசனை எனக்குள்ளாக ஓடியது. ஒரு கடிதம் கூடவே, பத்து வீடியோக்களை இணைத்திருந்தாள்… முதலில் கடிதத்தை படித்தேன்…
அன்புள்ள அம்மா.
இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும்போது, நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன். ஏன் இந்த முடிவு…? அப்படி என்ன நேர்ந்து விட்டது எனக்கு? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில், இத்துடன் இணைத்துள்ள வீடியோக்களில் இருக்கிறது. ஒன்றையும் விடாமல் பார்த்துவிடுங்கள்.
நான் ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கர் என்பது உங்களுக்குத் தெரியும், அந்த தொழில் நுட்பத்தை வைத்துத்தான் இந்த வீடியோக்களை கைப்பற்றினேன். எல்லாமே ஆதார வீடியோக்கள். இந்தக் கடிதத்தையும் வீடியோக்களையும் உங்களுக்கு மட்டுமே அனுப்பி இருக்கிறேன். சைபர் கிரைம் போலீஸாரின் நட்பு எனக்கு இருந்தாலுமே, அவர்களுக்குக் கூட இவற்றை அனுப்பவில்லை. நான் பெரிதும் மதிக்கும் உங்களின் சரியான முடிவு மூலமே, எனது தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
வருகிறேன் அம்மா.
என்றும் தங்களின்,
சுபாஷினி.
அந்தக் கடிதத்தை படித்து முடித்ததுமே, முதல் வீடியோவை ப்ளே செய்தேன். அதில் விரிந்தக் காட்சிகளைப் பார்த்ததுமே, வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல், பேரதிர்ச்சிக்கு ஆளானேன். ஒரு படுக்கை அறைக்குள், சுபா முழு நிர்வாணமாக கூனிக்குறுகி நின்றபடி கதறிக் கொண்டிருந்தாள். அதைப் பொருட்படுத்தாமல், அவளை ஜெகதீஸும் அவனைத் தொடர்ந்து ஷாமும், விக்கியும் மிருகத்தனமாக வன்புணர்வு செய்தார்கள். தொடர்ந்து, அதனைப் படம் பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு இளைஞனும் சுபாவை நெருங்கினான்… அவன்… அவன்… அய்யோ… கார்த்தியே தான். என் மகனே தான். என்னால் தாங்க முடியவில்லை. நெஞ்சுக்கூடு வெடித்துவிடும் போல உணர்ந்தேன். மற்ற வீடியோக்களை பார்க்கும் மனதிடம் என்னிடம் இல்லை. ஆனாலும் பார்த்தேன். அவை எல்லாமே, இந்த நால்வர் கூட்டணியால் வன்புணர்வு செய்யப்பட்ட வெவ்வேறு பெண்களின் வீடியோக்கள். என் கால்களுக்குக் கீழே பூமி நழுவுவதைப் போல் உணர்ந்தேன். மெல்ல மயங்கி தரையில் சரிந்தேன்.
மயக்கம் தெளிந்து நான் எழுந்தபோது, மணி மதியம் இரண்டு ஆகியிருந்தது. நடந்தவை எல்லாம் ஒரு நிழலாட்டமாக மனதில் ஓடியது. சுபா ஏன் தற்கொலை செய்துக் கொண்டாள் என்பதற்கு, வன்புணர்வு மட்டுமே காரணமாக இல்லை…. அதனையும் மீறி, தான் பெரிதும் மதிக்கும் பேராசிரியையின் மகன், காதலனாக நம்பிய ஜெகதீஸ், அவரது நண்பர்கள், இவர்கள் திட்டமிட்டு தன்னை பெருங்கொடுமைக்கு ஆளாக்கியதை, சுபாவால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்.
அந்த நால்வரும் சுபாவை மாத்திரமல்ல, என்னையும் ஏமாற்றி விட்டார்களே… அதிலும், கார்த்தியே இப்படியாக இருப்பான் என்பதை, எப்படித் தாங்கிக்கொள்ள முடியும். இந்தச் சுழலில் தான், எந்தத் தீர்க்கமான முடிவும் எடுக்க முடியாமல், தற்கொலை செய்துக் கொண்டுவிட்டாள். ஆனால், கார்த்தியையும் அவனது நண்பர்களையும் தண்டிக்கும் பொறுப்பை, என்னிடம் கொடுத்துவிட்டாள். சுபா நீ புத்திசாலிதாம்மா…
ஆனால், நான் என்ன செய்யப் போகிறேன், அந்த நால்வருக்கும் எப்படி தண்டனைக் கொடுப்பது? அந்த நால்வரும் சாக வேண்டும். ஆனால் எப்படி…? நான் போலீசுக்குப் போவதில்லை. கொலையும் செய்யப் போவதில்லை. ஆனால், அவர்கள் சாக வேண்டும். எப்படி? யோசித்து யோசித்து ஒன்றும் பிடிபடவில்லை. மாலை ஐந்து மணியைக் கடந்தபோது, அந்த யோசனைத் தோன்றியது. அதனை செயல்படுத்தினால், மிகச் சரியாக ஒர்க்அவுட் ஆகும் என்று எனக்குத் தோன்றியது. மளமளவென்று அதனை செயல்படுத்தும் காரியத்தில் இறங்கினேன்.
கோகுலுக்கு போன் செய்தேன். சுபாவின் மரணம் குறித்து பெருந்துக்கத்தோடு பேசினான். அவனிடம் ஜெகதீஸ், ஷாம், விக்கி… இந்த மூன்று பேர்களின் அம்மாக்களின் போன் நம்பரை மட்டும் வாங்கித்தரச் சொன்னேன். அடுத்த அரைமணி நேரத்தில் வாங்கிக் கொடுத்தான். அந்த மூன்று அம்மாக்களிடமும், என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “தெரியும்” என்றார்கள். “கார்த்தி அடிக்கடி வீட்டுக்கு வருவான்” என்றார்கள். சுபாவின் காதல் விஷயமும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. “சுபா சாவு ஜெகதீஸை ரொம்பவும் பாதித்து விட்டது. அவன் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல், அழுதுக்கொண்டு அறைக்குள் முடங்கிக் கிடக்கிறான்” என்றாள், அவனது அம்மா. நான் சிரித்துக் கொண்டேன்.
பிறகு, சுபா மரணம் பற்றி, அதற்குக் காரனமானவர்களான நால்வரின் கொடூரமான மறுபக்கத்தைப் பற்றி, சுபாவின் கடிதம் பற்றி, அவள் அனுப்பிய வீடியோக்கள் பற்றி விரிவாக அவர்களிடம் விவரித்தேன். அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள், அழுதார்கள். நான் அவர்களிடம் “கார்த்தியை இன்று இரவு தண்டிக்கப் போகிறேன். காலையில் அவன் உயிரோடு இருக்கமாட்டான்” என்பதைக் கூறி, எனது திட்டத்தை விவரித்தேன். அதனைக் கேட்ட அவர்கள், தங்களது மகன்களையும் அதேமுறையில் தண்டிக்க சம்மதித்தார்கள். நான் கார்த்திக்காகத் காத்திருந்தேன்.
அன்று இரவு 11-மணி….
வாசலில் கார் ஹாரன் சத்தம் கேட்டது. கார்த்தி வந்துவிட்டான். நான் பதறவில்லை… தடுமாறவில்லை… முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளவில்லை. விடியும் போது, கார்த்தியும் அவனது மூன்று நண்பர்களும் உயிருடன் இருக்கக் கூடாது. இங்கே நான் பொறுப்பு. மற்றவர்களுக்கு அவரவர் அம்மாக்கள் பொறுப்பு. கதவைத் திறந்தேன். சோகம் அப்பிய முகத்தோடு என்னைப் பார்த்தான். நான் மௌனமாக இருந்தேன். அவன் என்னைக் கடந்துச் செல்லும் போது கேட்டேன்.
“சாப்பிட சூடா எதுவும் தாயார் பண்ணட்டா கார்த்தி?”
“வேண்டாம்மா…. வரும்போதே, வழில சாப்பிட்டேன்”
அதற்குமேல் அவனுடன் பேசவில்லை. மணி 12 ஆவதற்காகக் காத்திருந்தேன். அந்த நேரத்தில், அவன் குளித்துவிட்டு, சற்று ரிலாக்ஸ்ட் ஆகியிருந்தான். நான் எதிர்பார்த்த நேரம் வந்தது. கண்ணாடி தம்ளரில் இளஞ்சூடாக பால் ஊற்றி எடுத்துக் கொண்டு, அவனது அறைக்குள் நுழைந்தேன். அவனிடம் கொடுத்தேன். வாங்கிக் குடித்தான். அந்தப் பாலில் நான் விஷம் ஏதும் கலக்கவில்லை. அது அவன் குடிக்கும் கடைசிப்பால்.
கார்த்தி பாலைக் குடித்து விட்டு என்னிடம் கிளாஸை நீட்டியபோது, மின்னல் வேகத்தில் அந்தச் செயலைச் செய்தேன். எனது நைட்டியை முழுவதுமாக களைந்துவிட்டு, முழு நிர்வாணமாக நின்றேன். அவன் பேயறைந்தவன் போல் அதிர்ச்சியாகி, கண்களைப் பொத்தி அலறினான். நான் அப்படியே நின்றேன். அவன் பிதற்றினான். போர்வையை எடுத்து வந்து என் மேல் போர்த்தி, என் நிர்வாணத்தை மூட முயற்சித்தான். அதற்கு இடம் கொடுக்காமல், விலகினேன். அவன் புலம்பினான்.
“என்னம்மா ஆச்சு உனக்கு … ஏன் இப்படி பண்றே?”
“அண்ணா… அண்ணா… னு கூப்பிட்டவளை, இப்படி தானடா நிர்வாணமாக்கி நாசமாக்குனீங்க. இப்போ, அம்மா வந்திருக்கேன். என்னையும் அப்படிப் பண்ணு” என்று நான் கூறவும், அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. என் காலில் விழுந்து கதறியழுது மன்னிப்புக் கேட்டான். நான் மிகத் தீர்மானமாக அவனிடம் என் முடிவைக் கூறினேன்.
“ரெண்டே வழிதான் இருக்கு கார்த்தி. விடியுறவரை என்னை நீ வன்புணர்வு செஞ்சு, உன் வெறியை, குணத்தை, எனக்குக் காட்டு… இல்ல…. மேலே ஃபேன் இருக்கு. அதோ அங்கே கயிறு இருக்கு. தூக்கு மாட்டிக்கிட்டு நீயே சாவு. இதுல எது உனக்கு சுலபம்னு நெனக்கிறியோ… அது உடனே நடந்தாகணும்…. கார்த்தி, தூக்கு மாட்டிக் கொள்ள சம்மதித்து, என் கண் முன்னாலேயே, கழுத்துத் தொங்கி இறந்தான். நான் எனது நைட்டியை அணிந்துக் கொண்டேன். அவனை செல்போனில் ஃபோட்டோ எடுத்து, மற்ற அம்மாக்களுக்கு அனுப்பினேன். அவர்கள் மூவரும் தங்கள் மகன்கள் தூக்கில் தொங்கும் ஃபோட்டோவை எனக்கு அனுப்பி இருந்தார்கள்.
அன்று நாங்கள் யாரும் எங்கள் மகன்களுக்காக அழவில்லை.
– கதைப் படிக்கலாம் – 20
இதையும் படியுங்கள் : மீண்டும் கொலுசின் சத்தம்!!




