– பா. ஏகரசி தினேஷ்
கடந்த சில மாதங்களாகத் தொடரும் நிகழ்வு தான் இது என்றாலும், இன்று சரியான நேரத்தில் உறங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தாள், கனகா. ஆனால் குழந்தை வேறு விதமாக நினைத்தது போலும். ஆறு மாத மகப்பேறு விடுமுறையை இரவோடு வழியனுப்பிப், புதிய விடியலை எதிர்நோக்கிக் காத்திருந்தவளது விழிகளில், உறக்கம் குடிகொண்டு தானிருந்தது… ஆனால் உறங்கத்தான் முடியவில்லை.
கிட்டத்தட்ட நடுநிசியை நெருங்கியும், ஏனோ குழந்தை சிணுங்கிக்கொண்டே இருந்தாள். மடியில் போட்டு பாலை ஊட்ட அடங்கும் சிணுங்கல்… மடியை விட்டு இறக்கிய மறு நொடி, மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும். அதற்குப் பின் எவ்வளவு நேரம் அவ்வாறே கடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் நீண்ட இரவின் ஏதோ ஒரு மணித்துளியில், இருவரும் உறங்கிப்போயினர்.
ஐந்தரை மணிக்கு அலறிய ஒலிக்கடிகை, குழந்தையின் காதுகளை எட்டக் கூடாது என்பதற்காக, அவள் செய்த பிரயத்தனங்கள் சொல்லி மாளாது. நெருப்புக்கு மத்தியில் உலாவுவதைப் போல், கண்களில் அப்படி ஒரு எரிச்சல். ஒரு பத்து நிமிடம் போகட்டும் என்று கண்ணை மூடியவள், சுளீரென்று முகத்தில் அறைந்த கதிரவனின் ஏதோ ஒரு கரத்தால்… பதறி எழுந்து… மணியைப் பார்த்தாள்… காலை எட்டு. தலையில் அடித்துக்கொண்டு எழுந்தவள், குழந்தைக் கட்டிலிலிருந்து கீழே விழாதவாறு, சுற்றிலும் தலையணை வேலியிட்டு, அறையை விட்டு வெளியேறினாள்.
நொடிமுள்ளுக்கிணையாகச் சுழன்றோடியவள், அடுத்த சில நிமிடங்களில் அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாரானாள். குழந்தை இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள். அள்ளி எடுத்து மடியில் கிடத்தி மாரோடு அணைத்தாள். ஆனால் குழந்தையின் ஆழ்ந்த உறக்கம் தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் எழுப்பிப் பாலூட்ட முயன்றாள். ஆனால் குழந்தை தூங்குவதே குறியாக இருந்து. அலுவலகம் துவங்கிவிட்டதை அறிவிக்கும் சங்கொலி, ஓங்கி ஒலித்தது. நேரம் செல்லச் செல்ல பொறுமையிழந்த கனகா, குழந்தையைக் கடிந்துக் கொண்டாள்…
“என்ன வந்தது இன்னைக்கு உனக்கு… எழுந்திரிச்சு பாலக் குடியேன்…”
“ஏய்… குழந்தைய ஏன் திட்டிக்கிட்டு இருக்க, நீ கிளம்புறதுனா கிளம்பு… நான் புட்டி பால குடுத்து சமாளிச்சுக்கிறேன்” என்றார், கனகாவின் அம்மா.
“இல்லம்மா, அத சரியா குடிக்க மாட்டாள். நான் மதியம் சாப்பிட வர ஒரு மணியாவது ஆகும்… அதுவர எப்படிம்மா”
“சரி அதுக்கு என்ன பண்றது… உனக்கு நேரமாவுதுல கிளம்பு…” வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பியவள், வெளியேறும் முன் குழந்தையை எட்டிப் பார்த்தாள். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த குழந்தையின் ஒட்டிய வயிறு, மெதுவாக மேலும் கீழுமாக அசைந்துக் கொண்டிருந்தது. இறுகிய மனதோடு அங்கிருந்து வெளியேறினாள்.
இருபது நிமிடம் தாமதமாக அலுவலகத்தை அடைந்தவள், அவளது மேசையில் குவிந்துக் கிடந்த கோப்புகளைப் பார்த்து அதிர்ந்து போனாள்.
“என்ன இது, இவ்வளவு ஃபைல குவிச்சு வச்சிருக்கீங்க. அதுவும் ரெண்டு மாசம் பழைய பில் கூடக் கிளியர் பண்ணாம வச்சிருக்கீங்க” என்று, அவளுக்குக் கீழ் வேலை செய்யும் அக்கவுன்ட் ஆஃபீசர் சிவராமனை கடிந்தாள்.
“மேடம் இது… பில் மதிப்பு கோடிக் கணக்கில இருக்குது… குறைந்த மதிப்பு உள்ள பில் எல்லாம் கிளியர் பண்ணியாச்சு. இது கொஞ்சம் பயமா இருக்கு அதான்…” என்றார் சிவராமன்.
“உங்களுக்குக் கான்ஃபிடென்ட் இல்லாட்டி மேனேஜர், சீனியர் மேனேஜர், ஏ.ஜி.எம்., ஜி.எம்.-னு எத்தனையோ பேர் இருக்காங்க. அவுங்கள ஒரு தடவச் சரி பார்க்கச் சொல்லி முடிச்சிருக்கலாமே”.
“அவுங்களும் நீங்க வரட்டும்னு சொல்லிட்டாங்க…” என்று தலையைச் சொறிந்தவரிடம், அதற்கு மேல் பேச விரும்பாது, வேலையில் மூழ்கினாள். அங்கங்கு சிணுங்கிய தொலைப்பேசிகள்… குழந்தையை நினைவுபடுத்த… உடனடியாக அம்மாவைத் தொடர்பு கொண்டவளுக்குக், குழந்தை அழவில்லை என்ற செய்தி ஆறுதல் தந்தது.
அவ்வப்போது நலம் விசாரித்த உண்மை விரும்பிகளுக்கு மத்தியில், சிலப் போலி பசுக்களும் இருக்கத்தான் செய்தன. தொலைப்பேசி உரையாடலாகச் சற்றே உறக்க ஒலித்தது, மேனேஜர் சேவியரின் ஜாடைப் பேச்சு…
“அடுத்தத் தடவ புரமோஷன் அண்ட் ட்ரான்ஸ்ஃபர் போடும்போது தெளிவா சொல்லிடனும், சுமாரா வேல செய்ற ஆண் ஊழியரா இருந்தாலும் பரவாயில்லை… ஆனா, பெண் ஊழியர் மட்டும் நமக்குக் கீழ் வேண்டவே வேண்டாம்னு. அதுங்க பாட்டுக்கு கல்யாணம்னு லீவுல போகுதுங்க, அப்பறம் குழந்தை… அதுக்கப்பறம் இன்னொரு குழந்தையினு… லீவு போட்டுக்கிட்டே இருக்குதுங்க. வேல பூரா, நம்ம தலையில தான் வந்து விழுவுது” என்றவாறு, தொலைப்பேசியைத் துண்டித்து எழுந்தவர், கனகாவைக் கடக்கும் போது…
“என்னமா… ஆறு மாசம் ஜாலியா இருந்துட்டு, இப்ப வேலை ஓட மாட்டுதா” என்றவாறு, டீயிற்கும் சிகரெட்டிற்கும் என… பதினோரு மணிக்குள், இரண்டாவது தடவையாகக் கேன்டீனை நோக்கி நடையைக் கட்டினார்.
அவர் மட்டுமல்ல, பெரும்பான்மை ஆண்களின் கேள்வி இதுவாகத்தான் இருந்தது. மேலும், சில வயதான பெண் ஊழியர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, “உங்களுக்கெல்லாம் பரவாயில்லை ஆறு மாசம்… ஆனா எங்களுக்கு அந்தக் காலத்தில மூணு மாசந்தான் லீவு… கொடுத்து வச்சவங்க நீங்க…” என்ற பொறாமையா… அல்லது ஆதங்கமா… எனப் பிரித்தறிய முடியாத பாவத்தை, வெளிப்படுத்திச் சென்றனர். அவர்கள் அனைவரையும் ஒற்றைப் புன்னகையில் கடந்துச் சென்ற கனகா, தொடர்ந்து வேலையில் மூழ்கினாள்.
பதினோரு மணிக்கு மேல், மார்பின் மேற்பகுதியில் லேசான வலியை உணரத் தொடங்கினாள். மெதுவாகத் தொடங்கிய வலி நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கத் தொடங்கியது. பன்னிரண்டு மணிக்கு மேல் அவளுக்கு வேலை ஓடவில்லை. ஏதோ ஒரு பாரத்தை நெஞ்சில் சுமப்பதைப் போன்று உணர்ந்தாள். நொடிகள் யுகங்களாக வேதனை தந்தன. சரியாக ஒரு மணிக்கு அங்கிருந்து வெளியேறினாள். வீட்டிற்கு வெளியே வண்டியை நிறுத்தும் போதே, குழந்தையின் அழுகை அவளை வரவேற்றது. அவசரமாக உள்ளே நுழைந்தவளுக்குக், குழந்தையின் சிறு உராய்வு கூடத் தாங்க முடியாத வலியைத் தந்தது.
பன்னிரண்டு மணிநேரத்திற்கு மேலாகக் குழந்தை குடிக்காதப் பால், கட்டிப்பட்டு வலியாய் வெளிப்பட்டது.
“அந்தப் பால கையால பீச்சி எடுத்துட்டு, புதுசா சுரக்குற பாலை குழந்தைக்குக் குடு. கட்டுன பாலு குழந்தைக்கு ஆவாது” என்றாள் கனகாவின் அம்மா.
வலியோடு வலியாக அதைப் பீச்சி வெளியேற்றுவதற்குள் குழந்தையின் அழுகை கதறலாக மாறியது. மீண்டும் பால் சுரக்கும் வரை குழந்தையாலும் சரி, கனகாவாலும் சரி, காத்திருக்க முடியவில்லை. அதுவரை இனித்த புட்டிப் பால், தாயைக் கண்டதும் ஏனோ அந்தக் குழந்தைக்கு வேப்பம்பூவாகிப் போனது. இதற்கிடையில், ஒன்றிற்கு இரண்டாக… மதிய உணவையும்… சில பூண்டுகளையும் மென்று விழுங்கி… குழந்தையைத் தூக்கி மார்போடு அனைத்து அமர்வதற்கும், தொழிற்சாலையின் மதிய உணவு இடைவேளை முடிவினை அறிவிக்கும் இரண்டு மணி சங்கு ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது.
இருப்பினும், குழந்தையின் பசியை ஓரளவு தனித்தப் பின் தான் கிளம்புவது என்ற முடிவோடு அமர்ந்திருந்தாள். குழந்தையோ ஆர்வமான சில நிமிட பருகல்… பின் சோர்ந்து சிறிது நேர ஓய்வு… பின் மீண்டும் பருகல்… ஓய்வு… எனத் தொடர்ந்து கொண்டிருந்தது. நேரம் மட்டும், பிடிக்க முடியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்த கனகா, தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள். குழந்தையோ, அப்போது தான் ஆர்வமாகச் சுவைத்துக் குடிக்கத் தொடங்கியது. குழந்தையின் பசி ஒரு பக்கம், நேரமின்மை மறுபக்கம் எனக் கிடந்து தவித்தாள் கனகா. ஒருகட்டத்தில் இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்தவள், குழந்தையை வலுக்கட்டாயமாக இழுத்து விடுவிக்கப் பற்றிய முலையைக் கடித்துத் தோற்றது குழந்தை. பிரசவ வலியை விடப் பல மடங்கு கொடூரமான வலியையும், வேதனையையும் அந்த நிமிடம் அவளுக்கு உரித்தாக்கியது. சிதறிய மனதுடன் சிணுங்கிய குழந்தையைப் படுக்கையில் கிடத்திய தருணத்தில், அவளையும் மீறி வழிந்த துளி கண்ணீர் தந்த சிலிர்ப்பில், மெல்லியதாய்ச் சிரித்தது குழந்தை. “நீ போய் வாமா நான் சமாளித்துக் கொள்கிறேன்” என்ற தொனியில் இருந்தது அந்தப் புன்னகை.
கனத்த இதயத்தோடு அலுவலகம் வந்தடைந்தவளை, மற்றுமொரு சக ஊழியர் வரவேற்றார் “என்ன கனகா ஜாலி தான்… ரெண்டே முக்காலுக்கு வர்றீங்க…” என்றவரையும், அதே புன்னகையோடு கடந்துச் சென்றாள்…
– கதைப் படிக்கலாம் – 25
இதையும் படியுங்கள் : ஆட்டுக்குட்டி