– பாமதிநாராயணன்
அந்த முதியோர் இல்லத்தின் ஜீவநாடியான, காமு மாமி… அன்று காலை திடீரென்று இறந்து விட்டார். இல்லம் களை இழந்து… அத்தனைபேரும் நிர்வாகி உள்பட கண்ணீரும் கம்பலையுமாய்… மாமியின் உடலருகே…. யாருக்குத் தகவல் கொடுப்பதென்று நிர்வாகிக்கு புரியவில்லை.
மாமி, தானே தனியாக… தனக்கு உறவென்று யாரும் இல்லை என்று சொல்லிக் கொண்டுதான் வந்தார். யாரும் இல்லாதவர்களுக்கு அவர்கள் உடலை எரித்துவிட்டு, அவர்கள் நினைவாகத் தோட்டத்தில் ஒரு செடியை நடுவது இல்லத்தின் வழக்கம்.
ஆனால் காமு மாமி எப்பேர்ப்பட்ட மனுஷி…. அப்படி ஏனோ தானோவென்று முடிக்க முடியுமா..
காமு மாமி அந்த இல்லத்துக்கு வந்ததிலிருந்து, இந்தப் பத்து வருஷங்களாக இல்லத்து வாசிகளுடன் ஒன்றிப்போய்… மாமி இல்லை என்றால் இல்லமே இல்லை என்று சொல்லும்படி, அத்தனைப் பேர் மனதிலும் நிறைந்திருந்தார்….
சபிக்கப்பட்டவர்களைப்போல் விரக்தியுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர்களை, தினமும் காலையில் நடைப்பயிற்சி, குளித்த பின் தியானம், சாப்பாட்டுக்குப் பின் சிறிது ஓய்வு, புத்தகங்கள் படித்தல்…… மாலை வேளைகளில் அருகிலுள்ள ஏதாவது ஒரு கோவில்… சில சமயங்களில் நல்ல சொற்பொழிவுகள், ஒன்றுமில்லை யா…… அக்கடாவென்று கடற்கரையில் உட்கார்ந்து காற்றை அனுபவித்தல்… என்று மாமி அட்டவணைப் போட்டு அனைவரையும். சோர்வடையாமல், சுறுசுறுப்பாய் இருக்கச் செய்வார்.
ஆதரவு தேடி வந்த மாமி… ஆதரவற்றோருக்கு ஆதரவாகவும்… தோட்டப் பராமரிப்பு….. சமையற்கட்டில் பங்கெடுப்பு என்று எல்லா இடங்களிலும் ஈடுபாட்டுடன் சிறப்பாய் கவனித்துக் கொண்டு இருக்க ஆரம்பித்ததில், நிர்வாகிக்குமே பல வித சௌகரியங்கள். இல்லத்து வாழ்க்கையை, கா.மு… கா.பி…, அதாவது காமு மாமிக்கு முன்.. காமு மாமிக்குப் பின் என்று பிரித்து மகிழ்வார்.
ஒரு சமயம் இல்லத்தைப் பார்வையிட்ட மத்திய மந்திரி ஒருவர், “முதியோர்கள் இருக்கும் இடம் என்றாலே, இயலாமையின் பலவீன முனகல்களும், புலம்பல்களுமாக இருக்கும் என்றில்லாமல், இப்படி அத்தனைப் பேரும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வது ஆச்சரியமாக இருக்கிறது” என்று பாராட்டியதிலிருந்து, நிர்வாகிக்கு மாமி மேல் ஒரு மரியாதையே ஏற்பட்டிருந்தது.
“யார் கிட்டேயாவது மாமி தன்னுடைய உறவுக்காரர்கள் பற்றிச் சொல்லியிருக்காரா” கேட்டுக்கொண்டே மாமியின் அலமாரியில் ஒரு டைரியைக் கண்டெடுத்தார் நிர்வாகி.. அதனுள் மடித்து வைக்கப்பட்ட ஒரு கடிதம்……
“அன்புள்ள நிர்வாகிக்கு”, என்று கடிதம் தொடங்கியிருந்து…… நான் இறந்துவிட்டால் யாருக்கும் தகவல் கொடுக்க வேண்டாம்… என் பிள்ளை உட்பட… என்னடாது, திடீர்னு பிள்ளை எங்கேயிருந்து வந்தான் என்றுக் குழப்பமாக இருக்கா.. ஆமாம் நான் பெற்ற ஒரே அருமைப் பிள்ளை. இந்தச் சென்னையில் ஒரு பெரிய டாக்டராக்கும். சொந்தமாக நர்சிங் ஹோம் வைத்துக் கொண்டு அமோகமாக இருக்கிறான்.
பெயர்… வேண்டாமே… ப்ளீஸ். நான் அவனைச் செல்லமாக கண்ணா என்று தான் அழைப்பேன். ஆனாலும் இப்போது அவனுக்கும் எனக்கும், எந்தத் தொடர்பும் இல்லை. எங்களுக்குள் இருந்த தொப்புள்கொடி பந்தத்தையே அறுத்துக்கொண்டு தான், நான் இங்கு வந்தேன். இதெல்லாம் இப்போது எதற்கு என்று மேலும் மேலும் குழப்பமாக இருக்கா… தயவு செய்து, இந்த டைரியில் நாற்பதாம் பக்கத்திலிருந்து ஐம்பதாம் பக்கம் வரை படித்துவிட்டு, கடிதத்தைத் தொடருங்கள்.
கடிதத்தை வைத்து விட்டு, வியப்புடன் டைரியில் நடுவில் கொஞ்சம் பக்கங்களைப் புரட்டினார்…….
மாமியின் கையெழுத்துக்களில்…. சுயசரிதை….
ஆஸ்பத்திரி, டாக்டர் என்று எந்த வைத்திய வசதியும் இல்லாதக் குக்கிராமத்தில், என் கணவருக்குத் திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலிக்கு உடனடி வைத்தியம் செய்ய முடியாமல், அவரைப் பறிக் கொடுத்தோம். அந்தச் சமயம் என் பிள்ளை ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். விவரம் தெரிந்தும் தெரியாத அந்த வயதில் அப்பாவின் இழப்பு, அதிலும்…. வைத்தியமின்றி , அவனை ரொம்பவே பாதித்துவிட்டது.
“அம்மா, நான் பாரு… டாக்டருக்குப் படித்து, இந்த ஊருக்கே டாக்டராக வந்து, எல்லாருக்கும் இலவசமாக சிகிச்சைப் பண்ணுவேன். ஆவேசம் வந்ததுப் போல பிள்ளை பேசியது கண்டு.. பாவம்.. அறியாப்பிள்ளை. அப்பாவின் அநியாய இழப்பு தாங்காமல் பேசுகிறான் என்று, அதற்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
ஆனால் பிள்ளையின் மனதில் சிறுபொறியாகப் பற்றிக்கொண்ட அந்த எண்ணம்…. வெறியாகப் படித்தான்.. பன்னிரெண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியின் முதல் மாணவனாக வருவான் என்று, சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.
“அம்மா நான் டாக்டருக்குத்தான் படிப்பேன்” என்று பிள்ளை சொன்னதும், “கண்ணா உன்னுடைய ஆசை…. லட்சியம்…. அதற்காக நீ உழைத்தது… எல்லாம் எனக்குப் புரிகிறது….
நாம் வசிப்பதற்கு இந்தச் சிறிய ஓட்டு வீடும், சில வீடுகளில் நான் சமையல் செய்து வரும் வருமானமும்தான், நம் வாழ்வாதாரம்… இந்த நிலைமையில், என்னால் அவ்வளவுப் பெரியப் படிப்பிற்கு எப்படி ஈடுக் கொடுக்க முடியும்…”
“அம்மா.. நம்ப நிலைமை எனக்குத் தெரிகிறது…. நான் முதல் மாணவன் என்பதால், எனக்குக் கண்டிப்பாக சென்னையில் ஏதாவது ஒரு மெடிக்கல் காலேஜில் சீட் கிடைத்து விடும். எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சூடறேம்மா.. நம்ப ஊருக்கு டாக்டரா வந்துடறேம்மா.. “இன்னும் என்னென்னம்மோ சொல்லிக் கெஞ்சியதோடு நிற்காமல், அவனது ஆசிரியர்கள் சிலரை, வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான்.
அவர்களும், “அம்மா, தயவுசெய்து உங்கள் பையனின் ஆசையையும், திறமையையும் முடக்கி விடாதீர்கள்.. சென்னையில் நாங்கள் சொல்லும் மெடிக்கல் காலேஜ் பிரின்ஸ்பாலிடம், உங்கள் மகனையும் அழைத்துக் கொண்டுப் போய் பேசுங்கள்.. அவர் மிகவும் நல்லவர்” என்று வற்புறுத்திச் சொன்ன இடத்துக்கு தட்டமுடியாமல், அவனுடன் சென்றேன்.
பிரின்ஸ்பாலும் பையனின் தகுதிக்குக் கண்டிப்பாக சீட் தருவதாக சொல்லி விட்டார். படிப்புக்கான சம்பளம் மிகவும் அதிகமாக இருந்தது.
அம்மாவும், பிள்ளையும் அவரிடம் எங்கள் வறுமை நிலையை எடுத்துரைத்தோம். “சார், எங்கள் கிராமத்தில் வைத்திய வசதி இல்லாதக் காரணத்தால் தான் அப்பாவை இழந்துவிட்டோம் என்ற தாபம் தாங்க முடியாமல், என் மகன் சிறுவயதிலிருந்தே நான் டாக்டராகி நம்ம ஊர் மக்களுக்கு வைத்தியம் செய்வேனென்று ரொம்பத் தீவிரமாகப் படித்தான். அவனுக்கு நீங்கள் இடம் கொடுத்தது ரொம்பவே சந்தோஷம். ஆனாலும், எங்களால் இவ்வளவு சம்பளம் கட்ட முடியாது.. நீங்கள் தான் பெரிய மனசு பண்ணணும். “என்று நானும், “சார் சார் கொஞ்சம் மனசு வையுங்க சார்” என்று பிள்ளையும் கேட்டதில் பிரின்ஸ்பாலும், தகுதியும் திறமையும் உள்ள இவன் முன்னுக்கு வர உதவி செய்தே ஆக வேண்டும் என்று…..
மேலதிகாரிகளிடம் பேசி, அவனுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க ஏற்பாடு செய்தவர், “இதோ பாரப்பா, இந்த டாக்டர் தொழில் மிகவும் புனிதமானது. மக்களுக்கு செய்யும் சேவையாக நினைக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
“கண்டிப்பாக சார்.. ரொம்ப நன்றி சார்.. சத்தியம் பண்ணி சொல்கிறேன் சார்… நான் படிச்சு முடிச்சு டாக்டராகி, எங்கக் கிராமத்தில் தான் தொழில் பண்ணுவேன். ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன்” என்று உறுதியாக பிள்ளைக் கூறவும், “ஆமாம் சார், என் பிள்ளை சொன்ன சொல் தவறமாட்டான்” என்று நானும் வாக்குக் கொடுத்தேன்.. நடக்கப் போவதை அறியாமல்…
என் பிள்ளை ஆசைப்பட்ட படிப்பு அந்த பிரின்ஸ்பால் மகராஜன் தயவால் கிடைச்சிருக்கு. அவன் தங்கும் விடுதிச் செலவு, புத்தகங்கள் வாங்க, விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து கிராமத்துக்கு வந்துப்போகும் செலவு என, அதிகப் பணத்தேவைக்கு நான் கல்யாண வீடுகளுக்கு சமையல், வீட்டிலேயே பக்ஷணம், அப்பளம், வடகம், ஊறுகாய், தயாரித்து விற்றல் என்று முழு நேரமும் அடுப்படியிலே
உழன்று பொருள் ஈட்டத் தொடங்கினேன். ஐந்து வருடக்காலம்…. நல்ல படியாக ஓடிற்று. என் பிள்ளையும் கருத்தாகப் படித்து. எம்.பி.பி.எஸ். முடித்தான்
அம்மா டாக்டர் படிப்பு முடிந்தாலும், எனக்குச் சென்னையிலேயே ஒரு ஆஸ்பத்திரியில் ஹவுஸ் சர்ஜனாக வேலைப் போட்டிருக்கிறார்கள்… அது முடிந்ததும், நேரே நம்மூருக்கு ஓடிவந்துடுவேன். முதலில், நம் வீட்டிலேயே சிறிய அளவில் ஆரம்பிக்கலாம்…. என்றெல்லாம் நம்பிக்கையாய் சொன்னவனை, சனிபகவான் வளைத்துப் பிடித்துக் கொண்டு விட்டாரோ… என்று நான் கவலைப்படும் படியாக… என் பிள்ளை நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டான்.
ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைப் பெற வந்த… பெரிய தொழிலதிபரின் பெண் மேல் காதல்….
“என் பெண்ணைக் கல்யாணம் செய்துக் கொள்ளணும் என்றால், நீ என் வீட்டு மாப்பிள்ளையாக இருக்கணும்…. நான் உனக்குப் பெரிய நர்சிங் ஹோம் கட்டித் தருகிறேன்” என்றெல்லாம் அந்த பிரமுகர் பேசிய ஆசை வார்த்தைகளில் மயங்கி, அவர் வலையில் விழுந்து விட்டான்…
என்னிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல், தானே கல்யாணத்தை நிச்சயித்துக் கொண்டான். கல்யாணத்திற்கு நாலு நாள் முன்பு, எனக்குப் பத்திரிக்கை மட்டும் தான் வந்தது… ஒன்றும் புரியாமல்…. அதிர்ச்சியும் குழப்பமுமாக ஓடினேன்….
“என்னடா கண்ணா இப்படிச் செய்து விட்டாய்… நர்சிங் ஹோம் அது இது என்று பணத்துக்கு அடிமையாகலாமா.. நீ இவ்வளவுப் படிக்க உதவி செய்த அந்த பிரின்ஸ்பாலுக்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை மறக்கலாமா…. கொடுத்த வாக்கை மீறலாமா…. சின்ன வயசிலிருந்து நம்ப கிராமத்து ஜனங்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்று தானே வைராக்கியமாய் டாக்டர் படிப்பு படித்தாய்…. இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை…. கல்யாணம் முடிந்து உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு, நம் ஊருக்கு வந்துவிடு” என்று பலவும் சொல்லிக் கெஞ்சினேன்.
ஆனால் என் பிள்ளை எதையும் கேட்கத் தயாராயில்லை. பணக்கார வாழ்க்கையின் ஆடம்பரங்கள், அவனைப் பழசை துச்சமாக எண்ணிப் பேச வைத்தது.
“அந்தப் பிரின்ஸ்பால் என் திறமைக்கு சீட் கொடுத்தார். ஆர்வக்கோளாறில் ஏதோ சொன்னேன். அதைப் போய் சத்தியம், வாக்கு என்றெல்லாம் சொல்லி என்னைக் குற்றவாளியாக்குகிறாய். எனக்காகக் காத்துக் கிடக்கும் ராஜபோக வாழ்க்கையை விட்டு, நான் வரமாட்டேன். நாம் கஷ்டப்பட்டதெல்லாம் போதும்… நீயும் என்னுடன் வந்து விடு.” அவன் பேசிய வார்த்தைகள் என் மேல் தீக்கங்குகளாய் விழுந்ததுப் போல் துடித்துப் போனேன்.
“இங்கே பாருடா… எப்போ நீ நன்றி மறந்து சத்தியம் தவறி, பணபோதைக்கு அடிமையாகிவிட்டாயோ, உன்னை என் பிள்ளை என்று நினைக்கவே எனக்கு அருவெறுப்பும், அவமானமுமாயிருக்கிறது… இந்த நொடியிலிருந்து தாய், மகன் என்று நமது பந்தம் அறுந்துவிட்டது. நமக்குள் இனி எந்த உறவும் தொடர்பு வேண்டாம்” என்று சபதம் செய்தவள், உடனே என் கிராமத்துக்குக் கிளம்பி வந்துவிட்டேனே தவிர, என்னால் அங்கு இருக்க முடியவில்லை.
எங்கள் ஊருக்கு வந்த ஒரு நாட்டு வைத்தியர்க்கு, எங்கள் வீட்டை இலவசமாகக் கொடுத்தேன். இந்த இல்லம் வந்து அடைக்கலமானேன்.
டைரியில் மாமியின் சுயசரிதை இத்துடன் முடிவடைந்திருந்தது.
நிர்வாகி மறுபடியும் கடிதத்தைத் தொடர்ந்து படித்தார். இங்கு வந்தப் பிறகு நான் நிம்மதியாக இருந்தாலும்…. என் மகன் சத்தியம் செய்தப்போது சாட்சியாக நானும் இருந்ததால், அவன் மீறிய அந்த சத்தியத்தை நான்தான் காப்பாற்றணும்… அந்த நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது என்றக் கவலை மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. நேற்று அடையாறு பெருமாள் கோவிலில் நன்றியைப் பற்றி பேசிய உபன்யாசகர், எனக்காகவே சொன்னதுப் போல் ஒரு கருத்து சொன்னார். “பணத்தால் மட்டுமே ஒருவருக்கு நாம் நன்றியைச் செய்ய முடியும் என்பதில்லை. நாம் விரும்பினால் எந்த விதத்திலும் செய்யலாம். நமக்குச் சொந்தமான மனசும் உடம்பும், நம்மிடம் தானே இருக்கு” என்று அவர் சொன்னது, என்னை யோசிக்க வைத்து இந்த நல்ல முடிவை எடுக்க வைத்தது. தயவுசெய்து எனக்காக நீங்கள் தான் அதைச் செய்யணும்.
நான் இறந்துவிட்டால் எனக்கு எந்த சம்ஸ்காரமும் செய்ய வேண்டாம். என் பிள்ளை படித்த… கடன்பட்ட அந்தக் கல்லூரிக்கு தகவல் கொடுத்து…. என் உடலை எடுத்துப்போய்…. அங்குப் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்கு உபயோகித்துக்கொள்ளச் சொல்லுங்கள். உபன்யாசகர் சொன்னதுப் போல், என் உடம்பால தான் அந்த நன்றிக் கடனைத் தீர்க்க முடியும். அந்த கல்லூரியின் பெயர், முகவரி, ஃபோன் நம்பர் எல்லாம், டைரியின் கடைசிப் பக்கத்தில்
எழுதி வைத்திருக்கிறேன். நீங்கள் தட்டாமல் இந்த உதவியை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கிறேன். மன்னித்து விடுங்கள். இப்படிக்கு காமு மாமி.
காமு மாமியின் கடிதத்தையும், டைரியையும் படித்து முடித்த நிர்வாகியின் கண்களில் நீர் துளிர்த்தது….
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன்… இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று நிரூபித்து வீட்டீர்கள் மாமி…. என்று மாமியை கைக்கூப்பி வணங்கி, மாமி சொன்ன இடத்துக்குத் தகவல் கொடுக்கப் ஃபோனை எடுத்தார்.
– கதைப் படிக்கலாம் – 47
இதையும் படியுங்கள் : பாகுபலி (உண்மையான அன்பின் பரிசு)