நடிகை ஜோதிகா தந்த நிதியால் மருத்துவமனை புதுப்பொலிவு பெற்றுள்ளது.
நடிகை ஜோதிகா கடந்த ஆண்டு ஷூட்டிங்குக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து ஒர் விழாவில் பேசிய ஜோதிகா, “கோயிலை பராமரிப்பதை போல், மருத்துவமனைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை. இங்குள்ள ஒரு மருத்துவமனையை பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.
நான் பார்த்ததை வாயால் சொல்ல முடியாது. கோயிலுக்கு அவ்வளவு செலவு செய்கிறார்கள், பராமரிக்கிறார்கள். அதற்கு தரும் கவனம், உண்டியலில் போடும் பணத்தை போல் பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டடத்துக்கும் கொடுங்கள். அந்த மருத்துவமனையை பார்த்து விட்டு என்னால் கோயிலுக்கு செல்ல முடியவில்லை” என்றார்.
நடிகை ஜோதிகாவின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் சர்ச்சையான விஷயமாக மாறியது.
இதைத் தொடர்ந்து, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை சீரமைக்க தன் பங்களிப்பாக ரூ.25 லட்சம் நிதி உதவியை ஜோதிகா வழங்கி இருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜோதிகா கொடுத்த நிதியின் மூலம் மருத்துவமனை சீரமைக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது. இதுகுறித்து புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள மருத்துவமனை இயக்குனர் இரா.சரவணன், “ படப்பிடிப்புக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. அவர் செய்த உதவியால் மருத்துவமனை எப்படி மாறி இருக்கிறது பாருங்கள்…. அன்பில், அக்கறையில் வியக்க வைக்கும் எங்கள் மாதங்கி ஜோதிகா வாழ்க பல்லாண்டு” என பதிவிட்டுள்ளார்.