ரஜினிகாந்துக்கு தமிழ் படிக்க மட்டுமே தெரியும் எழுத தெரியாது என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தனுஷுக்கும் அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா விஷாகனின் Hoote எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் பயனர்கள் தங்களது குரலின் மூலமாக தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சௌந்தர்யா, என் அப்பாவுக்கு தமிழ் படிக்க தெரியும். ஆனால், எழுத வராது. அவரிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்று கூறியதால் தமிழக மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனது தந்தை கட்சி தொடங்குவதாக அறிவித்தபின்னர் அது தொடர்பாக ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் தான் அனுப்புவார். அப்பொழுது பிறந்த யோசனை தான் hoote செயலி. எதிர்பாராத விதமாக கட்சி தொடங்க முடியாமல் போய் விட்டது. தற்போது இந்த செயலியை உருவாக்கி அதை அவரின் மூலமே வெளியிட்டதில் எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.