பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், தனது ரெக்கார்டிங் தியேட்டரை நீண்ட காலமாக இசையமைப்பாளர் இளையராஜா நடத்தி வருகிறார். இளையராஜாவின் இசை திறமையில் மயங்கிய எல்.வி. பிரசாத் அவருக்கு அந்த இடத்தை பரிசாக அளித்திருந்தார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக எத்தனையோ படங்களுக்கு அந்த தியேட்டரில் தான் இளையராஜா இசையமைத்துள்ளார்.
. கடந்த நவம்பர் மாதம் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தன்னை இடத்தைக் காலி செய்யச் சொல்லி தொல்லை செய்வதாக ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில், நீதிமன்றம் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயற்சி எடுத்தும், பலனலளிக்கவில்லை. அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசைக் குறிப்புகள், நோட்ஸ்கள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களைச் சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் இளையராஜா.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சட்டத்தை மீறி ஸ்டூடியோ உரிமையாளர் செயல்பட்டிருக்கிறார். எனவே சட்டத்தை மீறி செயல்பட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் சாவி இளையராஜாவிடம் இருக்கும்போது, அவரின் அறை உடைக்கப்பட்டு இசைக்குறிப்புகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.