மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இன்று தனது69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் நம் கோலிவுட்க்கு கொடுத்த முத்தான திரைப்படங்களை பற்றி அவர் பிறந்தநாளில் நினைவுபடுத்தி பார்க்கலாம்.
1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மௌனம் சம்மதம்’ திரைப்படத்தில் மம்மூட்டி முதன் முதலாக தமிழ் சினிமாவில் களம் இறங்கினார். நிலவொளி ஆரம்பமாகும் நேரத்தில் ஆற்றங்கரையோரம் நின்று இவர் அமலாவை நினைத்து உருகிய ‘கல்யாண தேனிலா’ அந்த கால இளம் பெண்களை சற்று கிறங்கடித்து தான் போனது. 100 நாட்கள் திரையரங்கில் ஓடி வெற்றியும் கண்டது.
அடுத்து இவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த தளபதியின் ‘தேவா’ கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே உள்ளது. ரஜினி, மம்மூட்டி, மணிரத்னம், இளையராஜா என இந்த ஜாம்பவான்கள் சேர்ந்து கொடுத்த தளபதி திரைப்படம் அல்ல சரித்திரம்.
அதிரடி அரசாங்கம் செய்து ஏழைகளுக்கு உதவும் தாதாவாக மம்மூட்டி, ஆரம்பத்தில் இவருக்கும் ரஜினிக்கும் மோதல் காட்சிகள் பிறகு ஒரு சூழ்நிலையில் நண்பர்களாக கைகோர்க்கும் இந்த திரைப்படம் மகாபாரத கர்ணன் துரியோதனன் நட்பின் கதை தழுவல்..
சிறைச்சாலையிலிருந்து வெளிவந்த ரஜினியை கட்டித்தழுவும் காட்சியிலும், “இதுவரை தேவராஜ பாத்தவங்க எல்லாம் பயந்தாங்க இப்போ மரியாதையா கையெடுத்து கும்புடுறாங்க” என பெருமிதத்தை கண்ணீரோடு சொல்லும் நேரத்திலும், கலெக்டர் என் தம்பி என்று ரஜினி சொல்லும்போது பார்வையிலேயே நவரசங்களை காட்டி கலங்கடித்து விடுவார்.
‘நட்புன்னா என்னான்னு தெரியுமா சூர்யான்னா என்னனு தெரியுமா’ என்ற வசனம் நட்பு வட்டாரங்களிடையே இன்றளவும் பிரபலமான ஒன்று. ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாடல் நட்பு உலகின் தேசிய கீதமாகவே ஆகிவிட்டது.
2000 ஆம் மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளிவந்தது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம்.
ராணுவ பணியின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் ராணுவத்திலிருந்து திரும்பிய வீரராக மம்மூட்டியின் கதாபாத்திரம். அவர் ஐஸ்வர்யாராயை விரும்புவதை பார்வையிலே காட்டிவிடுவார். ஐஸ்வர்யாராய் அப்பாஸை விரும்புகிறார் என தெரிந்ததும் விலகி நிற்பதில் காதலின் முதிர்ச்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து போவார். ஐஸ்வர்யாவின் குடும்பம் குடும்ப பிரச்சனையால் ஊரை விட்டு வெளியேற அவர்களை தேடி கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் தான் காதலித்த பெண்ணின் காதலனை அவளுக்காக தேடி கண்டுபிடிப்பது ! அது ஒரு வகையான காதல் போலும் .
“எல்லாம் இந்த அழகும் இளமையும் இருக்குற வரைக்கும் தான்” என மம்மூட்டி ஐஸ்வர்யாவிடம் சொல்வது காதலோடு சேர்ந்த அக்கறை. ஐஸ்வர்யா தன் விருப்பத்தை அவரிடம் தெரிவிக்கும் போது தன் ஆசை, கனவு, காதல், அன்பு, அக்கறை, பெருமை, ஆச்சர்யம் என அத்தனையும் இமைப்பொழுதில் தன் முகபாவனையில் காட்டி இப்படி ஒரு காதலன் நமக்கு கிடைக்க மாட்டானா என அத்தனை பெண்களையும் ஏங்க வைத்து விட்டார்.
மம்மூட்டி என்னும் மகா கலைஞன்
மம்மூட்டிக்கு திரை உலகில் அறிமுகம் தேவையில்லை. பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியில் முடிசூடா மன்னன், இதுவரை 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
எந்த கதாபாத்திரத்திலும் பொருந்தி வாழ்ந்து காட்டுபவர், 69 வயதிலும் தன் மகன் நாயகனாக நடித்து கொண்டிருக்கும் காலக்கட்டத்திலும், இவருக்கென ரசிகர் பட்டாளம் பெருகிக் கொண்டு தான் போகிறது. மலையாள திரை உலகின் மார்க்கண்டேயனுக்கு செய்திஅலையின் பிறந்தநாள் வாழ்த்து.