பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமசிற்கு சண்டைக் காட்சியின் போது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால், ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மலையாள சினிமாவில் தரமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் இளம் நடிகர்களில் டொவினோ தாமஸ் குறிப்பிடத்தக்கவர் ஆவார். கடந்த 2012ம் ஆண்டு ‘பிரபுவின்டெ மக்கள்’, என்ற படத்தில் அறிமுகமான இவர்,
‘ஏபிசிடி’, ‘சார்லி’, ‘மாயநதி’ ‘கப்பி’, ‘லூக்கா’ உட்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் மாரி 2 படத்தில் வில்லனாகத் தோன்றிய இவரது நடிப்பில் கடைசியாக வெளியான போரான்சிக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் வழங்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து, தற்போது இவர் ‘மின்னல் முரளி’, ‘வரவு’ மற்றும் ‘கள’ ஆகிய படங்களின் படப்பிடிப்பில் டொவினோ தாமஸ் மும்முரமாக பங்கேற்று வந்தார்.
அந்த வகையில், ரோகித் என்பவர் இயக்கும் “கள” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக எர்ணாகுளம் அருகே உள்ள பிறவம் என்ற இடத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களாகச் சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று டொவினோ தாமசின் வயிற்றில் வில்லன் மிதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு, கடும் வலியால் அவதியுற்றுள்ளார்.
இதையடுத்து உடனடியாக அவரை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் படக்குழுவினர் அனுமதித்தனர். பரிசோதனையில் அவருக்கு வயிற்றுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டொவினோவை உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.